அச்சு அசலா இருக்கே... அனைவரையும் சுண்டி இழுக்கும் கருணாநிதி சிலைகள்!
கருணாநிதி சிலைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு சிலைகளை வடித்து அவற்றினை மெரினாவில் காட்சிப்படுத்த உள்ளனர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிற்ப கலைஞர்கள்.
மக்களுக்கு ஏராளமான தொண்டுகளை செய்து, அதன் மூலம் மக்கள் மனதில் பிரபலமானவர்களுக்கு, அவர்கள் இறந்தபின் அல்லது அவர்கள் உயிருடன் இருக்கும்போதே சிலைகளாக வடிக்கிறோம். பிறகு தலைவர்களின் பிறந்த, மற்றும் இறந்த நாட்களில் அவர்களது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகிறோம். இதன் பொருள் அவர்களின் நல்ல போதனைகளை ஏற்று நடப்பதாகும். அவர்களின் அழகிய செயல்முறைகளை தீவிரமாக பின்பற்றுவது என்பதாகும்.
அந்த வகையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. குண்டூர் மாவட்டம் தெனாலியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரா ராவ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய தலைசிறந்த சிற்பிகள்தான் கருணாநிதியின் அனைத்து சிலைகளையும் வடிவமைத்துள்ளனர்.
சுண்டி இழுக்கும் சிலைகள்
கருணாநிதி முழு உருவசிலைகள், அமர்ந்துள்ள நிலையிலான சிலைகள் அப்படியே அனைவரையும் சுண்டி இழுக்கிறது. காரணம், அந்த சிலைகள் அப்படியே தத்ரூபமாக தயார் செய்யப்பட்டதுதான். இது தொடா்பாக சிற்ப கலை வல்லுநா் வெங்கடேஸ்வர ராவ் தெரிவிக்கும்போது, மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர் திமுக தலைவர் கருணாநிதி. அவர் மறைந்த 13 நாட்களில் இரவு பகல் என பார்க்காமல் கடுமையாக உழைத்து, பல்வேறு வடிவங்களில் அவரது சிலைகளை வடித்தோம்.
மெரினாவில் கருணாநிதி சிலை
இந்த சிலைகள் மதுரை மாவட்டத்திற்கும், திருவள்ளூா் மாவட்டத்திற்கும் தொண்டா்களின் கோரிக்கையின் பேரில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. மேலும், பல்வேறு வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலைகளை சென்னை மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தவும் முடிவு செய்திருக்கிறோம்" என்றார்.
உரிய அங்கீகாரம் வேண்டும்
இதேபோன்று, சிற்பக்கலை நிபுணர் ரவிச்சந்திரன் கூறுகையில் "அதிக உயரம் கொண்ட சிலை தயாரிப்புக்கு தேவையான தொழில் நுட்பத்தை சீனாவுக்கு சென்று கற்று அறிந்து கொண்டேன். ஆனால், அதற்கு இணையாக நம் நாட்டு பண்டைய முறைப்படி சிலை தயாரிப்பில் சிறப்பாக செய்வதற்கான திறமைகள் எங்களிடம் உள்ளது. அரசு இதுபோன்ற கலைகளை கண்டு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
உயிரூட்டமுள்ள சிலைகள்
தமிழக அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்கி வருவதில் முக்கிய பங்கு சிலைகளுக்குத்தான் உண்டு. அது அந்த காலம் ஆனாலும் சரி, இந்த காலம் ஆனாலும் சரி, எந்த காலம் ஆனாலும் தமிழக அரசியலையும் சிலையையும் பிரித்து பார்க்கவே முடியாது. நம் தொண்டர்களை பொறுத்தவரை, சிலைகளுக்கு உயிர் இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் சிலையாக இருப்பவரின் அளப்பரிய சாதனைகளுக்கும், வைரமான எழுத்துக்களுக்கும், எண்ணிலடங்கா நற்செயல்களுக்கும் உயிர் இருக்கவே செய்கிறது. அது கருணாநிதியின் தத்ரூப சிலைகளுக்கும் காலத்துக்கும் பொருந்தும்!
திருப்பி அனுப்பி விட்டனர்
ஆனால் இந்த கருணாநிதி சிலைகளை நினைவிடத்தில் வைக்க அரசு அனுமதி கொடுக்கவில்லை. அனுமதி பெறாமல் எடுத்து வரப்பட்ட இந்த சிலைகளை தற்போது அங்கிருந்து அகற்றிக் கொண்டு சென்று விட்டனர்.