துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நிர்மலா தேவியிடம் விசாரணை! ஏன் தெரியுமா?
பேராசிரியை நிர்மலா தேவியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக சிபிசிஐடி எஸ்பி ராஜேஷ்வரி தகவல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
விருதுநகர்: அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக சிபிசிஐடி எஸ்பி ராஜேஷ்வரி தெரிவித்துள்ளார்.
மேலும், ஆளுநர் நியமித்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் கமிஷனும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய விவகாரம் பற்றி பேராசிரியை நிர்மலா தேவியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, சிபிசிஐடி போலீஸ் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிர்மலா தேவி தொடர்புகள்
அதேநேரம் நிர்மலா தேவியிடம் ஆளுநர் நியமித்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தானமும் மூன்றாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த விசாரணையில், உயர்மட்ட அளவில் நிர்மலா தேவிக்கு இருந்த தொடர்புகள் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சந்தானத்திடம் மனு
இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் விசாரணை அதிகாரி சந்தானத்திடம் மனு அளிக்க உள்ளனர். அந்த மனுவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதில் இருந்து, பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் முறைகேடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி என்ன
மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் விசாரணைக்கு உள்ளாக்க வேண்டும், இதற்கு பிண்ணனியில் உள்ளவர்கள் மீது குற்றவியல் வழக்கு முடியும் வரை இடைக்கால பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், பல்கலைகழக விதிகளில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏன் பாதுகாப்பு
இதனிடையே பெரிய இடத்து தொடர்புகள் குறித்து நிர்மலா தேவி வாய் திறக்கும் முன்பாக அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நிர்மலா தேவி வழக்கறிஞர் இதுகுறித்து ஏற்கனவே தனது கவலையை தெரிவித்திருந்தார். எனவே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்துகிறார்கள்.