ஆகஸ்ட் இறுதிக்குள் ஏரி, குளங்களில் காவிரி நீர் நிரப்பப்படும்.. அமைச்சர் தகவல்
ஆகஸ்ட் இறுதிக்குள் ஏரி, குளங்களில் தண்ணீர் முழுமையாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தெரிவித்தார்.
திருச்சி: ஆகஸ்ட் இறுதிக்குள் ஏரி, குளங்களில் தண்ணீர் முழுமையாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தெரிவித்தார்.
மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரிநீரானது காவிரி, கொள்ளிடத்தில் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், திருச்சி மாவட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால்களுக்கு திறக்கப்பட்டு ஏரி, குளங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பழைய கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், அதவத்தூர் சந்தை, நவலூர் குட்டப்பட்டு, அரியாறு கலிங்கி, புது வாய்க்கால், பாப்பான்குளம், புங்கனூர் குளம், கூத்தப்பார் ஏரி, வாழவந்தான் கோட்டை ஏரி ஆகிய பகுதிகளில் தண்ணீர் செல்வதை அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, ஆட்சியர் கு.ராசாமணி, மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்தினவேல் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியது:
மாவட்டத்தில் உள்ள 76 ஏரி, குளங்களுக்கு முழுமையாக தண்ணீர் கொண்டு செல்லும் பணியில் பொதுப்பணித்துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இதில், 2 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 4 குளங்களில் 75 சதவீதத்துக்கு மேலும், 40 குளங்களில் 50 சதவீதத்துக்கு மேல் தண்ணீர் செல்கிறது. கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கூத்தப்பார், வாழவந்தான் கோட்டை ஏரிகள் புனரமைத்து, படகு குழாம் அமைத்து சுற்றுலா தலமாக மாற்றுவது தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயப்படும். மாவட்டத்தில் ஏரி, குளங்கள், கால்வாய்களை சீரமைக்க உலக வங்கியில் ரூ.1.50 கோடி பெற்று பணிகள் தொடங்கப்படவுள்ளது.
கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என்ற புகார்களுக்கு இடமில்லாத வகையில் தண்ணீர் கொண்டு செல்லப்படும் இவ்வாறு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார். ஆய்வின்போது, பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் கணேசன், உதவிக் கோட்ட பொறியாளர்கள் சிவக்குமார், கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.