ஸ்டெர்லைட் குழு சென்னையில் அக்.5-இல் மீண்டும் கருத்து கேட்பு
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதா வேண்டாமா என்பது குறித்து சென்னையில் உள்ள அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்பினரிடம் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடத்தப்பட்ட நிலையில் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி மீண்டும் கருத்துக் கேட்பு நடத்தப்படுகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசின் ஆணையின்படி கடந்த மே மாதம் 28-ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்டெர்லைட் நிறுவனத்தில் ஆய்வு செய்வதற்காக குழு அமைத்து உத்தரவிட்டார். அதன்படி, ஓய்வுபெற்ற ஹைகோர்ட் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சக விஞ்ஞானி சதீஷ் சி.கர்கோட்டி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல இயக்குனரக என்ஜினீயரும், விஞ்ஞானியுமான வரலட்சுமி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் நேற்று முன்தினம் மாலையில் தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் புதுக்கோட்டை உப்பாற்று ஓடை அருகே ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டு இருப்பதை நேரில் பார்வையிட்டனர்.
நேற்று 2-வது நாளாக ஆய்வை தொடங்கினர். அவர்கள் நேற்று காலை 8.30 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொள்வதற்காக சென்றனர். அங்கு ஜிப்சம் கொட்டி வைக்கப்பட்டு இருந்த பகுதி, தாமிரதாது வைக்கப்பட்டு இருந்த பகுதி மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு இருக்கும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சுமார் 1 மணி 53 நிமிடம் ஆய்வு நீடித்தது.
இதைத் தொடர்ந்து குமரெட்டியாபுரத்தில் பொதுமக்களிடமும் கருத்துக்களை கேட்ட குழுவினர் வீரபாண்டியபுரம் சுடுகாடு பகுதி, டி,குமாரகிரி, காயலூரணி ஆகிய பகுதிகளில் உள்ள தண்ணீரை பார்வையிட்டனர். கடந்த 2 நாட்களில் ஆலையை மூடுவதற்கு ஏதுவாகவே மனுக்கள் குவிந்துள்ளன.
இந்நிலையில் இன்றைய தினம் சென்னை வந்த அக்குழுவினர் தன்னார்வல அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றிடம் கருத்துக் கேட்பு நடத்தியது. இதைத் தொடர்ந்து வரும் 5-ஆம் தேதி மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. அனைத்து விதமான கருத்துகளை கேட்ட பிறகு அதை அறிக்கையாக பசுமை தீர்ப்பாயத்துக்கு இந்த குழு சமர்ப்பிக்கும்.
இதைத் தொடர்ந்து ஆலையை மீண்டும் திறப்பதா வேண்டாமா என்பதை தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவிக்கும். இந்த குழுவினரை சந்தித்து வைகோ, நல்லக்கண்ணு உள்ளிட்டோர் மனுக்களை கொடுத்துள்ளனர்.