ஸ்டெர்லைட் படுகொலை: சென்னை, தூத்துக்குடியில் சிபிஎம் கட்சியினர் போராட்டம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் நேற்று தூத்துக்குடியில் நடந்த அரசு பயங்கரவாத சம்பவத்திற்கு எதிராகவும் சென்னை, தூத்துக்குடியில் சிபிஎம் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
Recommended Video
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் நேற்று தூத்துக்குடியில் நடந்த அரசு பயங்கரவாத சம்பவத்திற்கு எதிராகவும் சென்னை, தூத்துக்குடியில் சிபிஎம் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. போலீசின் இந்த கண்மூடித்தனமான தாக்குதல் காரணமாக இதில் 12 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் இதைவிட அதிக பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலர் மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர். பெண்கள், மாணவர்கள், சிறுவர்கள் என்று பார்க்காமல் போலீஸ் கண்முடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த மோசமான அரசு படுகொலை காரணமாக தமிழகமே கொதித்துப் போய் உள்ளது. இந்த கொடூரமான அரசு பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சிபிஎம் போராட்டம் நடத்தி வருகிறது. ஆயிரக்கணக்கான கம்யூனிச கட்சியினர் களத்தில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே அங்கு போராட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் போலீசுக்கும் கட்சியினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. போலீஸ் அங்கு போராடிய கம்யூனிஸ்ட் கட்சியினரை கைது செய்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் அங்கே பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
அதேபோல் தூத்துக்குடியில் சிபிஎம் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டாலும் தமிழகம் முழுக்க போராட்டம் தொடரும் என கே. பாலகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.