போர் களமாகும் தூத்துக்குடி மருத்துவமனை.. மக்கள் மீது மீண்டும் போலீஸ் துப்பாக்கி சூடு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட மக்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மக்கள் போராடி வருகிறார்கள்.
Recommended Video
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட மக்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மக்கள் போராடி வருகிறார்கள். இதில் போலீசுக்கும் மக்களுக்கு இடையில் கலவரம் மூண்டுள்ளது.இதில் மக்கள் மீது மீண்டும் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.
மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. போலீசின் இந்த கண்மூடித்தனமான தாக்குதல் காரணமாக இதில் 12 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் இதைவிட அதிக பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலர் மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர். பெண்கள், மாணவர்கள், சிறுவர்கள் என்று பார்க்காமல் போலீஸ் கண்முடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த மோசமான அரசு படுகொலை காரணமாக தமிழகமே கொதித்துப் போய் உள்ளது. இந்த போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் காலையில் இருந்து அங்கு போராடி வருகிறார்கள். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வந்தது.
தற்போது இந்த போராட்டம் உச்சமடைந்துள்ளது. அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உள்ளே பெரிய அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் உள்ள மக்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மருத்துவமனையின் கேட் பூட்டப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆனாலும், மக்கள் மருத்துவமனையின் சுவர் ஏறி உள்ளே குதித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் மக்களுக்கும் போலீசுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. போலீஸ் அவர்களை மீண்டும் தாக்கி வருகிறது. இதில் பல மக்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மக்களும் பதிலுக்கு போலீஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் மக்கள் மீது மீண்டும் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.