ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 57-வது நாளாக தொடரும் கிராம மக்கள் போராட்டம்- மாணவர்கள் தர்ணா!
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி மாணவிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Recommended Video
தூத்துக்குடி : தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரும் போராட்டம் தொடர்ந்து வலுத்து வருகிறது. மக்களின் போராட்டம் இன்று 57வது நாளை எட்டியுள்ளது. பல்வேறு கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தற்போது செயல்பட்டு வரும் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தியும் அப்பகுதியைச் சேர்ந்த அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போரட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் இன்று 57வது நாளாகத் தொடர்ந்து வருகிறது.
அ.குமரெட்டியாபுரம் கிராமமக்களின் தொடர் போராட்டத்தையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை அருகே உள்ள மற்ற கிராமங்களான பண்டாரம்பட்டி, சில்வர்புரம், சங்கராப்பேரி, மடத்தூர், மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியபுரம் ஆகிய கிராமங்களிலும் மக்களும் போராடி வருகிறார்கள். இந்நிலையில், நேற்று முன் தினம் முதல் தூத்துக்குடி தபால் தந்தி காலனி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டு இடங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய போராட்டத்தில், தூத்துக்குடியில் உள்ளசில தனியார் மகளிர் கல்லூரிகளின், மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்கள். தூத்துகுடி மாவட்ட வழக்கறிஞர்களும் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.