ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: ஜெயக்குமார்
ஸ்டெர்லைட் ஆலை தேவை இல்லை என்பதில் என அரசு உறுதியாக உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தேவை இல்லை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடும் என்று தெளிவுபடுத்தியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், இந்த விவகாரத்தில் பொதுமக்கள் அமைதி காக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடியில் மக்களின் உணர்வு போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டிற்கு 10 பேர் பலியான சம்பவத்தினால் தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் போலீசாரின் துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் தனது வருத்தத்தினை வெளிப்படுத்தியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து கூறியதாவது:
இன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கலவரம் ஏற்க முடியாதது. அதுமட்டுமல்லாமல் மிகவும் வேதனை அளிக்கிறது. ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. மக்கள் விரும்பாத ஸ்டெர்லைட் ஆலை மட்டுமல்ல, மக்கள் விரும்பாத எந்த திட்டத்துக்குமே தமிழக அரசு ஆதரவு இல்லை என்றுமே கிடையாது.
மக்களின் உணர்வுக்கு அரசு மதிப்பளிக்கும். பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்து ஸ்டெர்லைட் ஆலை அனுமதி பெற்றது. ஆனால் அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்துள்ளது. பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தமிழக அரசு வாதிட்டும் வருகிறது. எனவே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தேவை இல்லை என்பதே அரசின் நிலைப்பாடும் என்பதால் பொதுமக்கள் அமைதி காக்க ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.