ஸ்டெர்லைட் ஆலை நிரந்தர மூடல்.. அரசாணை மட்டும் தீர்வாகுமா? மீண்டும் ஆலையை திறக்க வாய்ப்பு உள்ளதா?
Recommended Video
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு, அரசாணை வெளியிட்டாலும் இந்த உத்தரவை, வேதாந்தா குழுமம் நீதிமன்றம் மூலமாக சென்று, தடை பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தாலும், இதுவே நிரந்தரமா என்ற கேள்வி எழுகிறது. காரணம், உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, அந்த வழக்கில், ஸ்டெர்லைட்டை திறக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதியளித்தால், அப்போது தமிழக அரசு அரசாரணைக்கு மதிப்பு இருக்காது.
இதுதொடர்பாக முன்னாள் நீதிபதி கற்பக விநாயகம் கூறுகையில், உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தமிழக அரசின் உத்தரவையே நிலைநாட்டும் வாய்ப்பு உள்ளது. இதற்கு முன்பாக சில வழக்குகளில், மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மாநில மக்களுக்கு கெடுதி என நினைத்து ஆலையை மூட அரசு உத்தரவிடும்போது, அதை பெரும்பாலும் உச்சநீதிமன்றம் தடுக்காது என்பது பெருவாரியான சட்ட வல்லுநர்கள் கருத்து.
ஆனால், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்தோ வேறு மாதிரி உள்ளது. அவர் கூறுகையில், வேதாந்தா குழுமம் உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்புள்ளது. அப்போது அரசாணைக்கு மதிப்பு இருக்காது. ஆனால், நீதிமன்றமே அனுமதித்தாலும் மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். அரசாணை பிறப்பித்தாலும், பிறப்பிக்காவிட்டாலும், ஸ்டெர்லைட்டால் ஆலையை நடத்திவிட முடியாது என்பதே நிதர்சனம். மீறி நடத்தினால் அதை தகர்ப்போம் என்றார்.
இதனிடையே, ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக அரசு உத்தரவு பிறப்பித்தபோதெல்லாம், அந்த ஆலை நிர்வாகம் நீதிமன்ற அனுமதி பெற்று திறந்தது. எனவே, சட்டசபையில் ஸ்டெர்லைட்டை மூடுவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி, அதை குடியரசு தலைவர் ஒப்புதலை பெற்றால், நீதிமன்றம் சென்று, ஸ்டெர்லைட் மீண்டும் ஆலையை திறக்க முடியாது என்பது சில சட்ட வல்லுநர்கள் கருத்தாக உள்ளது.