ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கும்.. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் வேதாந்தா அனில்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அரசின் அனுமதி பெற்று மீண்டும் இயங்கும் என அதன் உரிமையாளரான அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை அரசின் அனுமதி பெற்று மீண்டும் இயங்கும் என அதன் உரிமையாளரான அனில் அகர்வால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் குடிநீர், நிலம் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அந்த ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் 100வது நாள் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.
70க்கும் மேற்பட்டோர் காயம்
இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அனில் அகர்வால் வீடியோ
இந்த சம்பவத்தால் தூத்துக்குடியில் மூன்றாவது நாளாக இன்றும் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளரும் வேதாந்தா குழுமத்தின் தலைவருமான அனில் அகர்வால் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வேதனை அடைந்துள்ளேன்
அதில் தூத்துக்குடியில் போராட்டத்தின் போது நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. அந்த சம்பவத்தால் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
பின்பற்றி வருகிறோம்
அரசு, நீதிமன்றங்களின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை இயங்கியது. அரசு மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகளை கடுமையாக பின்பற்றி வருகிறோம்.
உறுதியளிக்கிறேன்
தூத்துக்குடி மக்களின் விருப்பத்துடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க விரும்புகிறோம். தூத்துக்குடியின் வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் உதவியாக ஸ்டெர்லைட் ஆலை இருக்கும் என உறுதியளிக்கிறேன்.
|
மீண்டும் இயங்கும்
பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை
அரசின் அனுமதி பெற்றவுடன் மீண்டும் இயங்கும். நேற்று நடந்த சம்பவம் எனக்கு பெரும் வலியை கொடுத்துள்ளது. இவ்வாறு அனில் அகர்வால் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.