தொடரும் தீவிபத்துகள்.. பாதுகாப்பில்லாத அடுக்குமாடி கடைகள்.. தி. நகர்வாசிகளின் திகில் வாழ்க்கை!
சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல கடைகளில் தொடர்ந்து தீவிபத்துகள் ஏற்பட்டு வருவதால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பிரபல அடுக்குமாடி கட்டடங்களில் தொடர்ந்து தீவிபத்துகள் ஏற்பட்டு வருவதால் அங்கு பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
தி.நகர் சென்றால் போதும் அங்கு அம்மா, அப்பாவை தவிர அனைத்தையும் வாங்கி விடலாம். அந்த அளவுக்கு துணிக்கடைகள், நகைக் கடைகள், பாத்திரக் கடைகள், சோப்பு, சீப்பு, கண்ணாடி கடைகள் என அனைத்தும் குவிந்து கிடக்கின்றன.
இதனால் இங்குள்ள சாலைகளிலும், கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். பண்டிகை காலங்களில் கேட்கவே வேண்டாம். நிற்கக் கூட இல்லாத அளவுக்கு கூட்டம் கட்டி ஏறும்.
அடுக்குமாடிகள்
இங்கு சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ், போத்தீஸ், ஜெயச்சந்திரா டெக்ஸ்டைல்ஸ், நல்லி சில்க்ஸ், ஜிஆர்டி தங்க நகை மாளிகை என பல அடுக்குமாடி வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இப்பெரிய கடைகளுக்கு முன்பு சிறு சிறு கடைகளும் உண்டு. குறுகிய தெருக்களில் ஏராளமான கடைகள் உள்ளன. எல்லாம் கிடைத்தாலும் பாதுகாப்பு ஏற்பாடு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
சரவணா ஸ்டோர்ஸ் விபத்து
பல அடுக்குகளை கொண்ட சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் ரங்கநாதன் தெருவிலும், உஸ்மான் சாலையிலும் உள்ளது. இதில் கடந்த 2008-ஆம் ஆண்டு ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பாத்திரக் கடையில் அதிகாலை பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இரவு வரை நீடித்த இந்த பயங்கர விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. பெரும்பாலான ஊழியர்கள் மீட்கப்பட்ட விட்ட நிலையில் கோட்டைச்சாமி (27), ராமஜெயம் (22) ஆகிய இரு ஊழியர்கள் கருகி உயிரிழந்தனர்.
மற்றொரு தீவிபத்து
இதேபோல் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். மின்கசிவால் கேண்டினில் பிடித்த தீயை ஊழியர்களே அணைத்தனர்.
தி சென்னை சில்க்ஸ்
இந்நிலையில் இன்று அதிகாலை 7 அடுக்குகளைக் கொண்ட சென்னை சில்க்ஸில் தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். எனினும் கரும்புகை சூழ்ந்து கட்டடமே இடிந்து விழும் நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுற்றிலும் சிறுசிறு கடைகள் உள்ளதால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். மேலும் கட்டடமும் விரிசல் ஏற்பட்டுள்ளதால் கட்டடத்தின் ஸ்திரத்தன்மை ஆராயப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு குறைபாடு
இதேபோல் ஸ்திரத்தன்மை இல்லாத கட்டடங்கள் ஏராளமாக உள்ளது. இதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பின்பற்றப்பட்டனவா என்பது சந்தேகமாகவே உள்ளது. அதிகாலையில் தீவிபத்து நிகழ்ந்ததால் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், வேலை நேரங்களில் அதாவது பீக் ஹவர்ஸில் தீவிபத்து நடந்திருந்தால் நிலை என்னவாகி இருக்கும். எத்தனை உயிர்களை இழக்க நேர்ந்திருக்கும்.
கவனிக்க வேண்டும்
எனவே தி.நகரில் உள்ள பெரிய பெரிய கட்டடங்களில் விதிகள் மீறப்பட்டுள்ளனவா என்பதை தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். மற்றொரு விபத்து நடந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுவதற்குள் தமிழக அரசு விழித்துக் கொள்ள வேண்டும். அடுத்தடுத்து பிரபல கடைகளில் ஏற்பட்டு வரும் தீவிபத்துகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.