தூத்துக்குடியில் இன்னமும் போலீஸாரின் அச்சுறுத்தல் தொடர்கிறது : கனிமொழி
தூத்துக்குடியில் இன்னமும் போலீஸாரின் அச்சுறுத்தல் தொடர்கிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை : தூத்துக்குடியில் இன்னமும் போலீஸாரின் அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் பெண்கள் அச்சத்துடனே இருக்கிறார்கள் என்று திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் போலீஸார் பொதுமக்களிடையே வன்முறையை நிகழ்த்தியதாக பல்வேறு அரசியல் அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழி கூறுகையில், தூத்துக்குடியில் இன்னமும் போலீஸார் வன்முறையை கடைபிடித்து வருகிறார்கள். இன்றும் வீட்டிற்குச் சென்று பெண்களை அச்சுறுத்தி வருகிறார்கள்.
இதனால் அங்கு தனி மனித சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை இதுபோன்ற அராஜகப்போக்கை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.