விஜயகாந்த் அரசியலுக்கு முழுக்குன்னு எழுதுவீங்களா... நிருபர்களிடம் சீறிய சரத்குமார்
சென்னை: அரசியலுக்கு முழுக்கு என்று வெளியான தகவல்கள் உண்மையானது அல்ல என்று நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு நடிகர் சரத்குமார் தோல்வியடைந்தார். இதன் பிறகு எல்லாவற்றிலும் இருந்து சற்று ஒதுங்கியே இருக்கிறார்.
இந்நிலையில், சரத்குமார் அரசியலுக்கு முழுக்கு என்று செய்தி வெளியானது. மேலும் சமூக வலைத்தளங்களில் அரசியலுக்கு முழுக்கு போட்டது மாதிரியே சினிமாவுக்கும் முழுக்கு போடுங்க என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
அரசியலுக்கு முழுக்குப் போடவில்லை
இதையடுத்து இன்று செய்தியாளர்களை அழைத்து நேரில் பேசினார் சரத்குமார். அப்போது தான் அரசியலுக்கு முழுக்குப் போடவில்லை என்று திட்டவட்டமாக அவர் அறிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விஜயகாந்த் கூட அமைதியாகத்தான் இருக்கிறார்
நான் அரசியலுக்கு முழுக்கு போடவில்லை. தேர்தல் முடிந்தவுடன் விஜயகாந்த் கூட அமைதியாகத்தான் இருக்கிறார். அவரும் அரசியலுக்கு முழுக்கு என்று உங்களால் சொல்ல முடியுமா?
நடிப்பு தொழில்
நடிப்பு என் தொழில். அரசியல் மக்களுக்காற்றும் சேவை. இதில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் வரும். என் பள்ளி படிப்பில் இருந்தே நான் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறேன்.
இப்போது நேரம் கிடைத்திருக்கிறது
நடிகர் சங்கத் தேர்தலில் தோல்வி, சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி என வரிசையாக தோல்வியடைந்துள்ளதால்தான் அரசியலுக்கே முழுக்கு என்று பேசுகிறார்கள். எம்எல்ஏவாக இருந்த போது தொகுதிக்கு போக வர என்று அதிக வேலை இருக்கும். நடிக்க நேரம் இருக்காது. இப்போது கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது.
எப்படி இப்படி செய்தி வெளியிடலாம்
எனவே, மாதத்தில் 15 நாட்கள் நடிக்கவும் மீதி நாட்களை அரசியலில் சேவை செய்யவும் முடிவு செய்திருக்கிறேன். உடனே நான் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டேன் என்று செய்தி வெளியிடுகிறார்கள். என் தொழிலை நான் செய்தால் தானே பொருளாதாரத்தை ஈட்ட முடியும்.
நடிகர் சங்கத்தினரிடம் கேளுங்கள்
மேலும், காவிரி பிரச்சனை தொடர்பான கேள்விக்கு, காவிரிப் பிரச்சனை நடிகர் சங்க பிரச்சனை இல்லை என்றும் இது பற்றி நடிகர் சங்கத்தினரிடம்தான் கேட்க வேண்டும் என்றும் சரத்குமார் கூறினார்.