சென்னைக்கு மிக அருகில்.... வெள்ளத்திலும் விடாமல் துரத்தும் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள்
சென்னை: சென்னைக்கு மிக அருகில்... அருமையான வீட்டுமனை... இப்ப வாங்கி போட்டா அப்படியே டபுள் ஆகும். இன்றைய லட்சாதிபதி.. நாளைய கோடீஸ்வரர்... சீக்கிரம் வாங்க என்றெல்லாம் ஆசை காட்டி அழைத்து விற்பனை செய்த ரியல் எஸ்டேட் விளம்பரதாரர்கள் பலரை இன்றைக்கு காணவில்லைதான். சென்னையும் புறநகரும் வெள்ளத்தில் மிதப்பதால் பல டிவி சேனல்கள் ரியல் எஸ்டேட் விளம்பரங்களை ஒளிபரப்புவதை நிறுத்திவிட, ஒரு சில சேனல்களில் ரியல் எஸ்டேட் நேரம் என்றே இன்னமும் விளம்பரம் செய்து வெந்த புண்ணில் ஆசிட் ஊற்றி வருகின்றன.
பெருமழை வெள்ளத்தால் சென்னையின் புறநகரில் குடியிருப்புகள் மிதக்க... பல லட்சம் போட்டு அபார்ட்மென்ட்களில் குடியிருப்புகள் வாங்கியவர்களும், வீடு கட்டவேண்டும் என்று ஆசை ஆசையாக மனைகள் வாங்கியவர்களும் கையை பிசைந்து கொண்டு நிற்கின்றனர்.
சென்னைக்கு மிக அருகில்
வெள்ளம் வடியுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தில் வாங்கிய வீடுகளும், வீட்டு மனைகளும் இப்படி வெள்ளம் சூழ்ந்திருக்க, தொலைக்காட்சிகளில் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் மட்டும் நின்றபாடில்லை.
பிரபல காமெடி சேனல் நிறுவனத்தில் மணிமங்கலத்தில் இடம் விற்பனைக்கு உள்ளது என்று கூவி கூவி விற்பனை செய்கின்றனர்.
ரெடியா இருங்க சைட் பாக்கலாம்
நம்ம மணிமங்கலம் ஆஞ்சநேயர் கோயிலுக்கு பக்கத்துல இருக்கு... நடந்து போற தூரத்துல ஸ்கூல் இருக்கு... ரெடியா இருங்க ஞாயிறுக்கிழமை சைட் சுத்திப்பார்க்க போகலாம் என்றும் அழைக்கிறார் காமெடி சேனலின் தொகுப்பாளினி. இதை கேட்கும் போதே எரிச்சலும், கோபமும்தான் அதிகரிக்கிறது. சிரிப்பொலி என்ற பெயருக்கு ஏற்ப துன்பத்தில் இருப்பவர்கள் சிரிக்கலாம் என்பதற்காக இதனை ஒளிபரப்புகிறார்களோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
போட்ல கூட்டிட்டு போவாங்களோ
சைட் சுற்றிப்பார்க்க வேனில் கூட்டம் கூட்டமாக அழைத்துப் போனவர்கள் இப்போது போட்டில் அழைத்துப் போவார்களோ? அதோ அந்த குளமிருக்கே அங்கதான் எங்க சைட் இருக்கு தண்ணி வத்தின பிறகு வீடு கட்டிக்கலாம் என்று சொல்வார்களோ?
ரியல் எஸ்டேட் விளம்பரங்கள்
தமிழ்நாட்டில் டிவி சேனல்கள் கட்டுக்கடங்காமல் பெருகியது ஒருபக்கம் இருக்க... அவர்களுக்கு கைநிறைய காசை அள்ளிக்கொடுத்ததே ரியல் எஸ்டேட் காரர்கள்தான். டிவி சீரியல் நடிகர், நடிகைகள், சின்னத்திரை தொகுப்பாளர்கள் என யாரையும் விட்டு வைக்க மாட்டார்கள். அதிகம் பசையுள்ள பார்ட்டிகள் மாதவன், ஹன்சிகா என பெரிய திரை நடிகர்கள் பிடித்து விளம்பரப்படுத்துவார்கள்.
சென்னைக்கு மிக அருகில்
ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் ஆரம்பிப்பதே சென்னைக்கு மிக அருகில் என்றுதான். அதாவது தாம்பரம் தாண்டி கூடுவாஞ்சேரி, ஏன் மதுராந்தகம், செங்கல்பட்டு கூட ரியல் எஸ்டேட்காரர்களுக்கு சென்னைக்கு மிக அருகில்தான். இந்த விளம்பரங்களை நம்பி வீடும், மனைகளும், குடியிருப்புகளும் வாங்கியவர்கள் பாடுதான் இப்போது படு திண்டாட்டமாக உள்ளது.
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்
சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பது அனைவருக்கும் கனவு. அதுவும் ஐ.டி நிறுவனங்களில் பணியில் சேர்ந்தவர்கள் மாதம் 50000 ரூபாய் சம்பளம் வாங்கிய உடனேயே ப்ளாட் வாங்கவேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். இவர்களின் ஆசையை தெரிந்து கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கம்மி விலைக்கு வளைத்துப் போட்ட இடங்களில் எல்லாம் அடிப்படை வசதியே இல்லாத அளவிற்கு ப்ளாட்டுகளை கட்டி தலையில் கட்டி விடுகின்றனர்.
பத்தாண்டுகளில் வளர்ச்சி
சென்னையில் வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், சோழிங்கநல்லூர், ஓ.எம்.ஆர். சாலை, ஈ.சி.ஆர். சாலை, பெரும்பாக்கம், மாம்பாக்கம், பொழிச்சலூர், தாம்பரம், முடிச்சூர், ஜி.எஸ்.டி. சாலை, பூந்தமல்லி, போரூர், அம்பத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏராளமானோர் வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கி வீடு வாங்கியிருக்கிறார்கள்.
புரட்டிப்போட்ட வெள்ளம்
நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த தொடர்மழை புறநகர்ப் பகுதிகளின் உண்மையான கோர முகத்தைக் காட்டியிருக்கிறது. ஆற்றங்கரை, ஏரிக்கரை, தண்ணீர் வடிகால் பகுதிகளில் ஆக்கிரமித்து வீடு கட்டியவர்கள் அலறிக்கொண்டுள்ளனர். பலரது வீடுகள் முழ்கிவிட்டன. அபார்ட்மென்ட் கட்டிய பில்டர்கள் சரியாக திட்டமிடாமல் கட்டிய கட்டிடங்களில் தரைதளம், முதல்தளம் வரை மூழ்கிவிட்டது.
அள்ளிவிட்ட பொய்கள்
நம்ம மகேந்திரா சிட்டி பக்கத்திலதான் பதினைந்து அடியில் சுவையான நீர்; இதோ இங்கேதான் வருது ஐ.டி. கம்பெனி; பஸ்ஸைவிட்டு இறங்கினா, அஞ்சு நிமிஷத்துல வீடு வந்துடும்; ஸ்கூல், என்ஜீனியர் காலேஜ்னு எல்லாமே ரெண்டு, மூணு கிலோ மீட்டருக்குள்ளதான்; ஒரு ப்ளாட்டை வாங்கினா ஒரு ஸ்கூட்டி ஃப்ரீ...' மெகா சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் சைடு பிஸினஸாக ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் தோன்றி இப்படி அள்ளிவிடும் பொய்களுக்கு ஒரு அளவே இல்லை.
ஜெயில்ல போடுவாங்களோ
ஈமு கோழி தொடங்கி ஃபேர்னெஸ் கிரீம் வரைக்கும் விளம்பரங்களைப் பார்த்து வாங்கியவர்கள் வழக்கு போடும் காலமாகிவிட்டது. புறநகரில் கட்டிடமோ, வீட்டு மனையோ வாங்கியவர்கள் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் மீது வழக்கு போட்டால் அதில் நடித்த பல சின்னத்திரை நடிகர்களுக்கு சிறப்பு ஜெயில்தான் கட்ட வேண்டியது இருக்கும் என்கின்றனர் வெள்ளத்தில் வீடுகளையும், ப்ளாட்களையும் இழந்தவர்கள்.
ரியல் எஸ்டேட் அவ்ளோதானா?
இனி கொஞ்சநாளைக்கு புறநகரில் இடமோ வீடுகளோ வாங்க யோசனைதான் செய்வார்கள். வெள்ளம் காரணமாக புற நகர்ப் பகுதிகளில் வீடுகள் விற்பனை மந்தமாகும் என்ற கவலைப்படுகின்றனர் பலகோடி செலவு செய்து அபார்மென்ட்களை கட்டியுள்ள பில்டர்கள்.
விலை அதிகரிக்கும்
வெள்ளம் அதிகம் பாதித்த இடங்களில் வீடுகள் விற்பனை குறையும்போது விலையைக் குறைத்துக் கட்டுமான நிறுவனங்கள் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல வெள்ளம் வராத பகுதிகளில் அதைக் காரணம் காட்டியும், அதை முன்னிலைப்படுத்தியும் இன்னும் விலையை உயர்த்தவும் வாய்ப்பு உள்ளது.
அப்பாவிகள் பாடு பெரும்பாடு
ரியல் எஸ்டேட் மந்த கதியில் நடந்துவரும் இந்த வேளையில் மக்கள் தலையில் எப்படியாவது மனைகளை கட்டிவிட வேண்டும் என்று துடிக்கும் பில்டர்களும் புரமோட்டர்களும் கடைசி அஸ்திரமாக மீண்டும் டிவி விளம்பரங்களை கையில் எடுக்க வாய்ப்புள்ளது. விபரம் தெரிந்தவர்கள் தப்பிவிடுவார்கள்... விவரம் தெரியாத அப்பாவி மக்கள்தான் இவர்களிடம் சிக்கி படாதபாடு படப்போகிறார்கள்.
அப்படி யோசிக்காதீங்க... இப்படி யோசிங்க
40 லட்சம்...50 லட்சம்னு யோசிக்காதீங்க... 20 லட்சம்... 18 லட்சம்னு யோசிங்க... என்று சொல்லி சொல்லியே சென்னையை விட்டு ரொம்ப தூரம் தள்ளி வீடு வாங்க வைத்தவர்கள் இப்போது காணவில்லை. எல்லாம் வெள்ளம் வடியும் வரைக்கும்தான். மீண்டும் இவர்கள் வரலாம்... மக்களே இனியாவது ஒருதடவைக்கு 4 தடவை யோசிச்சு வாங்குங்க.. விழிப்போடு இருங்க.