அழுத்தம் காரணமாகவே ஆளுநரிடம் கடிதம் கொடுத்தேன் - சபாநாயகரிடம் ஜக்கையன் விளக்கம்
தொடர் அழுத்தம் காரணமாகவே முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததாக கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் சபாநாயகர் தனபாலிடம் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: அழுத்தம், வலியுறுத்தல் காரணமாக முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தேன் என்று சபாநாயகர் தனபாலின் நோட்டீஸுக்கு கம்பம் அதிமுக எம்.எல்.ஏ.ஜக்கையன் விளக்கம் அளித்துள்ளார்.
தினகரன் அணியில் இருந்த ஜக்கையன் எடப்பாடிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார். புதுச்சேரியில் தினகரன் ஆதரவாளர்களுடன் தங்கிய ஜக்கையன் திடீரென அணி மாறியுள்ளார். தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை சந்தித்த பிறகு முதல்வர் எடப்பாடியுடன் ஜக்கையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பழனிசாமி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை, திரும்பப் பெறுவதாக தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துத் தனித்தனியாகக் கடிதம் கொடுத்தனர். இதனிடையே, 19 பேரின் எம்.எல்.ஏ. பதவியைப் பறிக்க வேண்டும் என்று அரசுத் தலைமைக் கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பினார்.
இதையடுத்து, "கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் உங்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது" என்பதற்கு ஒரு வாரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார் சபாநாயகர். இதைத் தொடர்ந்து, 19 பேரும் சபாநாயரிடம் விளக்கமளித்தனர். இந்த விளக்கம் திருப்தியில்லை என்றும் செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சபாநாயகர் தனபால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பினார்.
19 பேருக்கு அளிக்கப்பட்ட கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், எம்எல்ஏ ஜக்கையன் சபாநாயகர் தனபாலை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் தொடர் அழுத்தம், வலியுறுத்தல் காரணமாக முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தேன் என்று சபாநாயகர் தனபாலிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.