திருத்தணி அருகே பள்ளி மாணவர்கள் மோதல்- அரசுப் பேருந்து மீது கல்வீச்சு!
திருத்தணி அருகே பள்ளிமாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
திருத்தணி : திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகையில் அரசு பள்ளி மாணவர்கள் மோதலில் அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் - திருத்தணி வழியாக அரசு பேருந்தில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள் அன்றாடல் மோதலில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் இன்று கே.ஜி. கண்டிகையில் அரசுப் பள்ளியில் படித்து வரும் இரு தரப்பு மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் சீருடையுடனேயே தகராறில் ஈடுபட்டனர்.
பள்ளி மாணவர்களின் இந்த மோதலைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த மோதல் காரணமாக சோளிங்கரில் இருந்து திருத்தணி சென்ற அரசுப் பேருந்தின் கண்ணாடியை மாணவர்கள் உடைத்துள்ளனர். மாணவர்களின் இந்தச் செயல் காரணமாக பேருந்து நடுவழியிலேயே நிறுத்தியதால் பொதுமக்கள் கண்டிகையில் அவதிக்கு ஆளாகினர்.
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் ரயில் தின கொண்டாட்டம் என்ற பெயரில் பட்டா கத்தியுடன் சென்று ரகளையில் ஈடுபட்டது மாணவர்கள் மத்தியில் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.