ஜெபக் கூட்டத்திற்கு வந்த உமாசங்கர் ஐஏஎஸ் கார் மீது கல்வீசித் தாக்குதல்!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே கிறிஸ்தவர்கள் நடத்திய ஜெபக் கூட்டத்திற்கு வந்த தமிழக ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கரின் கார் மீது இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கல்வீசித் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கடை அருகே மாராயபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது வீட்டில் பிரார்த்தனை கூட்டம் நடத்துவதாகவும், இதில் உமாசங்கர் ஐ.ஏ.எஸ். கலந்து கொள்வதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போலீஸிலும் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு உமாசங்கர் வந்தார்.
இதையடுத்து அங்கு இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் மற்றும் இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் திரண்டனர். உமாசங்கருக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் மற்றும் போலீஸார் விரைந்து வந்தனர். கூட்டத்தினரை கலைந்து செல்லுமாறு எஸ்.பி. உத்தரவிட்டார். ஆனால் கலையவில்லை. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர். அதன் பின்னர் உமாசங்கரை மட்டும் பிரார்த்தனை கூட்டத்திற்கு அனுமதித்தனர்.
அதன் பின்னர் உமாசங்கர் கூட்டத்திற்குச் சென்றார். அது முடிந்ததும் காரில் கிளம்பினார். அப்போது குழித்துறை பகுதியில் திடீரென சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து கார் மீது சரமாரியாக கல்வீசித் தாக்கினர். இதில் கார் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டது. அதன் பேரில் போலீஸார் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.