இது நம் வாழ்வாதாரம்... பொறுத்தது போதும் தமிழக அரசே... அடுத்தது என்ன?
தமிழக விவசாயிகளின் ஜீவாதார பிரச்னையில் மத்திய அரசு நீதிமன்றம் அறிவுறுத்தியும் கைவிட்டுள்ளது இனியும் பொருத்திருக்காமல் தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும்.
சென்னை : தமிழக விவசாயிகளின் ஜீவாதார பிரச்னையில் மத்திய அரசு நீதிமன்றம் அறிவுறுத்தியும் கைவிட்டுள்ளது இனியும் பொருத்திருக்காமல் தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் மட்டுமே நீதிமன்றங்கள் கொடுக்கும் தீர்ப்பின்படி தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு தண்ணீர் கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வரும் கர்நாடகாவின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதனாலேயே உச்சநீதிமன்றம் கடைசியாக காவிரி வழக்கில் தண்ணீரின் அளவை குறைத்து தீர்ப்பு அளித்தாலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை வரவேற்றனர்.
ஆனால் உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கொலக்கெடு முடிந்ததே தவிர, காவிரி மேலாண்மை வாரியம் வழக்கம் போல இந்த முறையும் கானல் வாரியமானது. தீர்ப்பில் மேலாண்மை வாரியம் இல்லை என்று தட்டிக் கழித்து, 4 மாநில அதிகாரிகளை நீர்வளத்துறை செயலாளர் மட்டுமே சந்தித்து பேசி பேருக்கு கூட்டம் நடத்தியது என்று காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தை நத்தை போல நகர்த்தியது மத்திய அரசு.
வாரம் ஒருவர் டெல்லி பயணம்
மத்திய அரசு போலவே அதிமுக அரசும் இந்த விஷயத்தில் தொடக்கத்தில் இருந்தே பொருத்திருந்து பார்க்கலாம், பொருத்திருந்து பார்க்கலாம் என்றே சொல்லி வருகிறது. மற்ற விஷயங்கள் அதாவது அதிமுக பிளவுபட்டு துண்டு துண்டாக கட்சி சிதறிக் கிடந்த போது வாரம் ஒரு முறை ஓ.பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் அழைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடியை காவிரி விஷயத்திற்காக ஒரு முறை கூட முதல்வரோ துணை முதல்வரோ சந்திக்கவில்லை.
மக்களை நம்பவைப்பதற்காகவா?
அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார்கள் தீர்மானம் போட்டார்கள், பிரதமரை சந்திக்க நேரம் கேட்டார்கள். ஆனால் பிரதமர் சந்திக்க மறுத்துவிட்டார் என்று விஷயத்தை ஊற்றி மூடிவிட்டார்கள். வாரமொரு முறை ஓபிஎஸ், ஈபிஎஸ் பிரதமருடன் யார் நெருக்கம் என்பதை காட்டிக்கொள்ள டெல்லி பறந்தார்களே அப்போதெல்லாம் மட்டும் எப்படி மோடியை சந்திக்க அனுமதி கிடைத்தது. ஆக இப்போது சட்டரீதியான அணுகுமுறை என்று அரசு போட்டது எல்லாம் வெறும் வேஷமா அல்லது தமிழக மக்களிடம் நாங்கள் அனைத்து முயற்சியும் செய்தோம், மத்திய அரசு இசைந்து கொடுக்கவில்லை என்பதற்கான நாடகமா? நேற்று கூட முதல்வர் பழனிசாமி இன்று வரை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறினார்.
தமிழக அரசு என்ன செய்யப்போகிறது
ஆனால் எல்லா கெடுவும் காலாவதியாகிவிட்டது, இப்போது என்ன செய்யப்போகிறது அரசு. எம்பிகள் தற்கொலை செய்து கொள்வேன் என்று பேசுவதை விட்டு அவர்களை ராஜினாமா செய்ய வைத்து, மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரத் தயாராக இருக்கிறதா அரசு. இப்போதைய நிலையில் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் அவர் எடுத்திருக்கும் முடிவு இப்படியாகத் தான் இருக்கும் என்பதை அவர் வழியில் ஆட்சியில் நடத்துபவர்கள் உணர்ந்து செயல்படப் போகும் காலம் எப்போது.
அதிமுகவிற்கு கரும்புள்ளியாகிவிடும்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் முடிவையும் கூட அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் தான் இருக்கிறார்கள். ஒரு வேளை மத்திய அரசு விளக்கம், அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்த பின்னர் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருமா? இது தமிழக விவசாயிகளின் ஜீவாதார பிரச்னை இதில் மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்பட்டால் இது அதிமுக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளி என்பதை உணர்ந்து செயல்படுவார்களா ஆட்சியாளர்களும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களும்.