ஹைகோர்ட் உத்தரவு எதிரொலி: பள்ளிகளுக்கு அருகே புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் தீவிர சோதனை
சென்னை: பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறாதா என இரண்டாவது நாளான இன்றும் சென்னையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பள்ளி, கல்லூரிகள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகளுக்கு அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு முழுமையாக பின்பற்றப்படவில்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்த உத்தரவிட்டது. இவ்விகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கை பற்றி வரும் 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். இதனையடுத்து, காவல்துறையினர் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது பொது இடங்களில் புகை பிடித்த 355 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு 200 ரூபாயும், புகையிலை பொருட்கள் விற்பவர்களுக்கு 500 முதல் ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.