கடலூர், நாகை, புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை கூண்டு குறைப்பு
கடலூர், நாகை, புதுச்சேரி துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டு குறைக்கப்பட்டுள்ளது.
கடலூர்: நாடா புயல் எச்சரிக்கை காரணமாக கடலூர், நாகை, புதுச்சேரி துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டிருந்தன. தற்போது புயல் வலுவிழந்து காணப்படுவதை அடுத்து புயல் எச்சரிக்கை கூண்டு குறைக்கப்பட்டுள்ளது.
கடலில் புயல் உருவானதும் கடற்கரையை ஒட்டியுள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுவது வழக்கம். இது, கடலில் வரும் படகு மற்றும் கப்பல்களுக்கு சமிக்ஞை தரும் வகையில் ஏற்றப்படுகிறது. புயலின் தீவிரம், எந்த திசையில் கடக்கும் என்பது குறித்து, அந்தந்த துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் எச்சரிக்கை கூண்டைப் பொருத்து கண்டறியலாம்.
இந்த நிலையில் புதுச்சேரி அருகே 210 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிகாலையில் வேதாரண்யம் கடலூருக்கு இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தின் கூறியுள்ளார்.
இதனிடையே நடா புயல் வலுவிழந்ததை அடுத்து புதுச்சேரி துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு 3 ஆக மாற்றப்பட்டுள்ளது. அதே போல் காரைக்கால் துறைமுகத்தில் 5 ஆக இருந்த புயல் எச்சரிக்கை கூண்டு 3 ஆக மாற்றப்பட்டது.
கடலூர் துறை முகத்தில் ஏற்றப்பட்டிருந்த 7-ம் எண் எச்சரிக்கை கூண்டு புயல் வலுவிழந்ததை அடுத்து 3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதே போல் நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு 3 ஆக குறைக்கப்பட்டுள்ளது.