சேவல் - இரட்டைப் புறா சண்டை.... இரட்டை இலையை திரும்பப் பெற்று 'அம்மா' வென்ற கதை!
இன்றைக்கு அரசியல் பேசும் நடுத்தர வயது இளைஞர்கள் பலரும் மறந்த, முதல் முறை ஓட்டுப்போட்டுவிட்டு அரசியல் பேசும் பலருக்கும் தெரியாத ஒரு அரசியல் வரலாறு இது.
தமிழகத்தின் நவீன அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத பக்கங்களும் கூட.
எம்ஜிஆர் அகாலமாக மரணமடைந்த தருணம் அது. முந்தின நாள் கத்திப்பாராவில் எம்ஜிஆர் தலைமையில் நேரு சிலையை பிரதமர் ராஜீவ் காந்தி திறந்து வைக்கிறார். அடுத்த நாள் அதிகாலை எம்ஜிஆர் மரணமடைந்துவிட்டதாக வானொலி, தொலைக்காட்சிகளில் அதிரவைக்கிறது செய்தி.
1987, டிசம்பர் 24-ம் தேதி நடந்த எம்ஜிஆர் மரணத்தில்தான் ஜெயலலிதாவின் தனி அரசியல் தீவிரமாகிறது.
அங்கேயே எம்ஜிஆர் மனைவி ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரு கோஷ்டிகளாகப் பிரிந்தது அஇஅதிமுக.
தொடர்ந்து முதல்வரான ஜானகி அம்மாள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், பெரும் ரகளையாகி, ஆட்சி கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்தது.
6 மாதங்களில் தேர்தல். திமுக தன் தோழமைக் கட்சிகளுடன் போட்டியிட்டது. காங்கிரஸ் தன் சொந்த பலத்தைச் சோதித்துப் பார்க்க ஜிகே மூப்பனார் தலைமையில் தனித்துக் களம் கண்டது.
அதிமுக இரண்டாகப் பிரிந்து ஜெயலலிதா தலைமையில் ஒரு அணி போட்டியிட்டது. ஜானகி தலைமையில் இன்னொரு அணி, சிவாஜி கணேசனின் புதிய அரசியல் கட்சியான தமிழக முன்னேற்ற முன்னணியுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டது. அதிமுக இரண்டுபட்டதால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும், ஜானகி அணிக்கு இரட்டைப் புறா சின்னமும் கிடைத்தன.
தேர்தலில் திமுக வெற்றிப் பெற்றது. ஜெயலலிதா தலைமையிலான அணிக்கு 27 இடங்கள் கிடைத்தன. அவர் பிரதான எதிர்க்கட்சித் தலைவரானார். ஜானகி அணிக்கு ஒரு இடம் கூடக் கிடைக்கவில்லை. கொஞ்ச நாள் அமைதியாக இருந்தார் ஜானகி. ஒரு நல்ல நாளில் ஜெயலலிதா - ஜானகி சந்திப்பு நடந்தது. இதைத் தொடர்ந்து அரசியலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஜானகி, தனது அணியை ஜெயலலிதாவிடமே ஒப்படைத்துவிட்டார் (இந்த இணைப்பு பிடிக்காமல் ஆர்எம் வீரப்பன், திருநாவுக்கரசர், கே பாக்யராஜ், எஸ்எஸ் ராஜேந்திரன் போன்றோர் தனிக்கட்சிகள் ஆரம்பித்துவிட்டனர்).
இப்போது ஒன்றுபட்ட அஇஅதிமுகவுக்கு எம்ஜிஆரின் வெற்றிச் சின்னமான இரட்டை இலை கிடைத்தது. அடுத்து வந்த 1991 தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் பெரும் மெஜாரிட்டி பெற்று ஆட்சியைப் பிடித்தது அதிமுக. ஜெயலலிதா முதல் முறையாக முதல்வர் பதவி ஏற்றார்.
குறிப்பு: இந்த வரலாற்றில் ராஜீவ்காந்தி படுகொலை, கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக் கலைப்பு என கிளை வரலாறுகள் தனி கதை!