எஸ்.வி சேகரைக் கைது செய்க.. வள்ளுவர் கோட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எஸ்.வி சேகரைக் கைது செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
Recommended Video
சென்னை : பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து பரப்பிய எஸ்.வி சேகரை கைது செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன், பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி சேகர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக கருத்து ஒன்றை பதிந்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு வலுத்ததை அடுத்து அந்தப் பதிவை நீக்கினார்.
ஆனால், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து அவரைக் கைது செய்ய போலீஸார் முயற்சி எடுத்த நிலையில், எஸ்.வி சேகர் தலைமறைவானார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமின் கேட்டு எஸ்.வி சேகர் தாக்கல் செய்திருந்த மனு மீது நடந்த விசாரணையில், எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து போலீஸாருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும், அவரை உடனடியாக கைது செய்யவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், எஸ்.வி சேகரை கண்டித்தும், அவரை உடனடியாக கைது செய்யக்கோரியும், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெறவும் எஸ்டிபிஐ கட்சியினர் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.