ஆம்பூர் இளைஞர் ஷமீல் கொலை - இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்கு பதிய எஸ்.டி.பி.ஐ கோரிக்கை
சென்னை: ஆம்பூரில் பெண் ஒருவர் காணாமல் போன வழக்கில் ஷமீல் என்ற இளைஞரைப் படுகொலை செய்த ஆய்வாளர் மார்டின் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த 15 ஆம் தேதி ஆம்பூரை சேர்ந்த ஷகீல் என்கிற இளைஞர் பள்ளி கொண்டா காவல் நிலைய ஆய்வாளர் மார்ட்டின் என்பவரால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை என்கிற பெயரில் நான்கு நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து சித்ரவதை செய்ததில் அந்த இளைஞர் படுகாய முற்றார். கடந்த 19 ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 26 ஆம் தேதி அவர் மருத்துவமனையில் இறந்த விட்டார்.
இது அப்பட்டமான காவல்நிலைய படுகொலையாகும். இந்த படுகொலையை கண்டித்து நேற்று சென்னை அரசு தலைமை மருத்துவமனை முன்பு எஸ்.டி.பி.ஐ கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது போன்று நேற்று இரவு ஆம்பூர் இளைஞர்கள் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறை அதிகாரிகள் தடியடி நடத்தியதில் பொதுமக்களும் காயமடைந்துள்ளனர். எனவே, இது காவல்துறை பொதுமக்கள் மோதலாக மாறியுள்ளது. இதில் பலர் படுகாய முற்றனர்.. பல பொது சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நடைபெற்ற சம்பவங்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக எனது கண்டனங்களை தெரிவித்துக கொள்கிறேன். ஷமீல் என்கிற இளைஞரை படுகொலை செய்த ஆய்வாளர் மார்டின் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கொலைவழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும். ஷமீலின் குடும்பத்திற்கு 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் காவல்நிலைய மரணங்கள் தொடர்வதை கண்டிக்கிறேன். இதை தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது தடியடி தாக்குதல் நடத்திய அதிகாரிகள் மீதும் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். முழுமையான அமைதி ஆம்பூரில் ஏற்பட அனைவரும் ஒத்துழைக்குமாறு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.