தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு.. மீண்டும் பதற்றம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரசுப் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த கருங்குளம் பகுதியில் மர்ம நபர்கள் அரசுப் பேருந்துக்கு தீ வைத்ததால் பதற்றம் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறையை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வந்தது.
மெல்ல திரும்பும் இயல்பு நிலை
மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையால் அங்கு இன்று முதல் இயல்பு நிலை மெல்ல திரும்புகிறது.
நெல்லை சென்ற பேருந்துக்கு தீ
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தில் அரசுப் பேருந்துக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உடன்குடியில் இருந்து நெல்லை செல்லம் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம்
குறைந்த அளவில் பயணிகள் இருந்த நிலையில் அங்கு வந்த சிலர் பெட்ரோலை ஊற்றி பேருந்திற்கு தீ வைத்துள்ளனர். அப்போது அவர்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு எதிராக முழக்கமிட்டதாக கூறப்படுகிறது.
மீண்டும் பதற்றம்
பேருந்து கொழுந்து விட்டு எரிவதை தொடர்ந்து அங்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர். பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.