ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஹைகோர்ட் தடையை மீறி தமிழகம் முழுவதும் மறியல் - கைது
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும், 7-வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் நேற்று முதல் கால
சென்னை: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு 2 ஆக உடைந்துள்ளது. அரசு ஊழியர் சங்கம் தலைமையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் நேற்று தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், பட்டதாரி ஆசிரியர் கழகம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், இடைநிலை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட 17 சங்கங்கள் பங்கேற்றன.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று தொடங்கினர் . மற்றொரு பிரிவினர் அக்டோபர் 15வரை போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.
போராட்டத்திற்கு தடை
அரசு ஊழியர்களின் காலவரையற்ற போராட்டத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. ஊழியர்கள் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் போராடுவது அடிப்படை உரிமை ஆகாது என்ற உச்சநீதிமன்றத்தின் அறிவுரையையும் எடுத்துரைத்துள்ளது.
தடையை மீறி போராட்டம்
தடையை மீறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று 2வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைநகரங்களில் ஒன்று திரண்டு அரசுக்கு எதிராக கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார்கள். போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும்படி தலைமை செயலாளர் அழைப்பு விடுத்தும் அதனை ஏற்காமல் இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் செய்து கைது
சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் மாநில அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியலிலும் ஈடுபட்டு கைதானார்கள்.
சென்னையில் போராட்டம்
சென்னையில் எழிலகம் வளாகத்தில் உள்ள அரசின் பல்வேறு துறை அலுவலக பணிகள் ஊழியர்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்டன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு பகுதியினர் மட்டும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதால் பெரும்பாலான அலுவலகங்கள் செயல்பட்டன.
பள்ளிகள்
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த புதுக்கிராமம், நல்லூர், வழக்கம் பாறை மற்றும் அந்திகிராமம் ஆகிய ஊர்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளிகள் மூடப்பட்டன. எந்தவித முன்னறிவிப்புமின்றி பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.