கிரண் பேடிக்கு எதிராக கொந்தளித்த புதுச்சேரி.. காங்., திமுக பந்த்தால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிப்பு!
புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
புதுச்சேரி: ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்காததால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
பா.ஜ.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.,க்களை ஆளுநர் கிரண்பேடி அண்மையில் நியமனம் செய்தார். அவர்களுக்கு ரகசியமாக ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதற்கு ஆளும் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க ஆகிய கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
இதைத்தொடர்ந்து முழு அடைப்பு போராட்டம் இன்று காலை தொடங்கியது. இதன் காரணமாக அரசு, தனியார் பஸ்கள் இயங்கவில்லை. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதேநேரத்தில் தமிழக அரசு பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
இதனிடையே புதுச்சேரியில் அந்தோணியார் கோயில் அருகே தமிழக பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சென்ற அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்தனர்.