குடிநீர் கேட்டு மக்கள் போராட்டம்.. சட்டையைப் பிடித்து இழுத்த போலீஸ்காரர்களால் பரபரப்பு!
சாலை மறியல் செய்த பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஈரோடு: கோபி அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்த பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவினால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள அளுக்குளி ஊராட்சி மன்றத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பவானி ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் மின் மோட்டார் தற்போது பழுதடைந்துள்ளதால் கடந்த மூன்று ஆண்டுகளாக பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்கப்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றாச்சாட்டாகும்.
இதுதொடர்பாக அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த கிராமமக்கள் 300 க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் கோபிபாளையம் பிரிவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக கோபி சத்தியமங்கலம் பிரதான சாலையில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ பகுதிக்கு வந்த கோபி டி.எஸ்.பி செல்வம் தலைமையிலாக போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியநிலையில், போலீசார் பொதுமக்களை சட்டையை பிடித்து இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சம்பவ பகுதிக்கு வந்த கோபி வட்டாட்சியர் பூபதி விரைவில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.