இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு
இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கட்டிடங்கள் சரிந்து கீழே விழுந்ததில் 97 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜகர்தா: இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவிற்கு வடக்கே சுமத்ரா தீவிலிருந்து 130 கி.மீ தொலைவில் சிக்ளி என்ற பகுதியை மையமாக கொண்டு ஆழ்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கதால் கட்டடங்கள் சரிந்து கீழே விழுந்ததில் முதல்கட்டமாக சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியது. தற்போது உயிரிழப்பின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.
2004ஆம் ஆண்டு சுமத்ரா தீவு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உருவான சுனாமி அலைகள் இந்தியா, இலங்கை வரை தாக்கியதில் பல லட்சம் பேரை காவு கொண்டது. சுனாமி பேரலைகளை ஏற்படுத்திய பாதிப்பு 12 ஆண்டுகள் கடந்த பின்னரும் மறக்க முடியாத நினைவுகளாக உள்ளது. நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டடங்கள் சரிந்து விழுந்ததில் 18 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தநிலையில், உயிரிழப்பின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயருமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.