எடுத்து கொடுத்த கருணாநிதி.. விட்டு கொடுக்காத எம்ஜிஆர்.. இந்த நட்பு மீண்டும் வருமா??
அனைவரையும் சிலிர்க்க வைத்த நண்பர்கள் வாழ்ந்தனர் எம்ஜிஆரும் கலைஞரும்.
சென்னை: வெளியூரிலிருந்து கலைஞர் சென்னைக்கு ரயிலில் திரும்பி கொண்டிருக்கிறார்.
அப்போது தன் ஆருயிர் நண்பன் எம்ஜிஆர் மறைந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. ஆனால் அந்த தகவல் பொதுமக்களுக்கு கிடைப்பதற்கு முன்பே ரயில் நிலையத்திலிருந்து நேராக ராமபுரம் தோட்டத்திற்கு சென்று அதிகாலையிலேயே அஞ்சலி செலுத்திவிட்டு தனது கடமையை நிறைவேற்றினார்.
திமுக தலைவர். ஆனாலும் 40 ஆண்டு கால நண்பர் என்று எம்ஜிஆருக்காக கண்ணீர் விட்ட அவரால், எம்ஜிஆர் உடலுக்கு அஞ்சலி செலுத்தவோ, இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளவோ முடியாமல் போய்விட்டதை அவரால் தற்போது வரை ஜீரணித்து கொள்ள முடியவில்லை. தமிழக அரசியலைகூட குடும்ப உறவுகளாகவே பார்த்தவர்களில் மிக முக்கியமானவர் கலைஞர்.
நான் அளவோடு ரசிப்பவன்
அவர்களது நட்புக்கு ஒரு எடுத்துக்காட்டை கூற வேண்டுமானால், பெரிய பெரிய சம்வங்களும், சாட்சிகளும் தேவையில்லை. சினிமா பாடல் ஒன்றே போதும். அரசியலில் எம்ஜிஆரும்-கலைஞரும் புகழின் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம் அது. நேர் எதிர் துருவங்களாக அரசியலில் றெக்கை கட்டி பறந்து கொண்டிருந்தார்கள். 'எங்கள் தங்கம்' படத்தில் ஒரு பாடலை கவிஞர் வாலி எழுதி கொண்டிருந்தார். அதற்கு முதல் வரி 'நான் அளவோடு ரசிப்பவன்' என்று எழுதிவிட்டார். அடுத்த வரிக்காக மண்டையை போட்டு உடைத்து கொண்டார்.
எடுத்துக் கொடுத்த கருணாநிதி
அந்த நேரம்பார்த்து அங்கே வந்த கலைஞர், அது எம்ஜிஆர் பாடல் என தெரிந்தும், வாலியிடம் கேட்கிறார் "அடுத்த வரி நான் சொல்லட்டுமா?" என கேட்டார். ஓ... தாராளமாக... தாங்களேன் என்று வாலி கேட்க, 'எதையும் அளவின்றி கொடுப்பவன்' என அடுத்த வரியை எடுத்துக்கொடுத்தார் கலைஞர். இந்த விஷயம் எம்ஜிஆர் காதுக்கு எட்டியது. அதே படத்தில் 'நான் செத்துப்பிழைச்சவன்டா' பாடலில் "ஓடும் ரயிலை இடைமறித்து அதன் பாதையில் தனது தலைவைத்து... உயிரையும் துரும்பாய் தான் மதித்து தமிழ் பெயரை காத்த கூட்டம் இது" என்று வரிகளை இடம் பெறச் செய்தார். இது திமுக தலைவரின் கல்லக்குடி போராட்டத்தை நினைவு கூர்ந்தே இவ்வாறு செய்தார் எம்ஜிஆர்.
சிக்கி கொண்ட கலைஞர்
இதேபோன்று இன்னொரு உதாரணம் சொல்லலாம். கல்லக்குடி ரயில் போராட்டத்தில் திருச்சியில் அடைக்கப்பட்ட கலைஞர், விடுதலை ஆகி ரயில் மூலம் சென்னை வருகிறார். அப்போது ரயில்நிலையம் முழுவதும் தொண்டர்கள் படை. சிறைக்கு சென்று திரும்பிய மாபெரும் வீரனை வரவேற்க காத்திருந்த கூட்டத்தில் வசமாக சிக்கி கொண்டார் கலைஞர். நெருக்கி தள்ளுகிறார்கள் மக்கள்.
தொலைந்த கடிகாரம்
அப்போது அந்த கூட்டத்திலிருந்து கலைஞரை குனிந்து தூக்குகிறார் எம்ஜிஆர். கூடியிருந்த மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அந்த மக்கள் வெள்ளத்தில் எம்ஆரின் கையிலிருந்த காஸ்ட்லி வாட்ச் ஒன்று தொலைந்து போக, "அச்சச்சோ.. வாட்ச் தொலைஞ்சிடுச்சே" என்று கலைஞர் வருத்தப்பட, "அது வெறும் வெளிநாட்டு கடிகாரம்தான், அது போனால் என்ன, உள்நாட்டு தலைவரான உங்களை காப்பாற்றுவதுதான் முக்கியம். உங்களை காப்பாற்றியதற்காக எத்தனை வாட்ச் தொலைந்தாலும் பரவாயில்லை" என்றார் எம்ஜிஆர்.
வள்ளல் குணம்
சென்னை பல்கலைக்கழகம் எம்ஜிஆருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது. இப்படி பட்டம் கொடுத்தது எதிர்க்கட்சிகளிடையே பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அதனை ஒரு பிரச்சனையாக்கி அப்போது சட்டமன்றத்தில் கடுமையாக தாக்கி பேசிக் கொண்டிருந்தார் திமுக உறுப்பினர் துரைமுருகன். பேசி முடியும்வரை அமைதியாக இருந்த கலைஞர், பிறகு மெதுவாக துரைமுருகனை கூப்பிட்டு, "எம்ஜிஆர் மீது ஆயிரம் விமர்சனங்களை வைத்து பேசலாம், எதிர்க்கலாம். ஆனால் அதை நீ செய்யலாமா? நீ அதை செய்தால் நன்றி மறப்பது போல ஆகிவிடும். எவ்வளவோ முரண்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், அவருடைய வள்ளல் குணத்தை நாம் குறையே சொல்ல முடியாது. அந்த ஒரு குணத்துக்காகவே அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை நாம் ஏற்றுக் கொள்ளலாம்" என்றார்.
பெயர் சொன்னதே இல்லை
இதுபோல பல உதாரணங்களை இருவரது நட்பின் அடையாளத்திற்கு சொல்லிக் கொண்டே போகலாம். அந்த நட்பின் கற்பினை இருவரும் இறுதிவரை கடைப்பிடித்தனர். அதனால்தான் எம்.ஜி.ஆர். மரணமடையும் வரை "கலைஞர்" என்றுதான் அழைத்தாரே தவிர மேடைகளில்கூட "கருணாநிதி" என்று சொன்னதே இல்லை