கும்பகோணத்தில் ரயிலை மறித்த இளைஞர்கள்... பயணிகளுடன் நடுவழியில் நிற்கிறது!
கும்பகோணம் அருகே ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வுகோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை பயணிகள் ரயில் நீண்டநோமாக தண்டாவாளத்தில் நிற்கிறது.
கும்பகோணம்: ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கொண்டுவர வலியுறுத்தியும் பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வலியுறுத்தியும் கும்பகோணத்தில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நெல்லை பயணிகள் ரயிலை மறித்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஆண்டுதோறும் எந்த தடையும் இன்றி நடத்தும் வகையில் நிரந்தரச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் பீட்டா அமைப்பை இந்தியாவில் இருந்து வெளியேற்றக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததால் மத்தியஅரசின் ஒப்புதலுடன் ஜல்லிக்கட்டுக்கு நேற்று அவசர சட்டம் இயற்றப்பட்டது.
இந்நிலையில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்த முடியாது என்று கூறிய மாணவர்கள் நிரந்தர சட்டம் கொண்டுவர வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கும்பகோணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்கள் நெல்லை - மயிலாடுதுறை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை பயணிகள் தொடர்வண்டி நீண்ட நேரமாக தண்டவாளத்தில் நிற்கிறது.