ரயில் நிலையத்தில் ஆயுதங்களுடன் மோதல்.. கல்லூரி மாணவர் அதிரடி கைது
திருவள்ளூர் மாவட்டம் பட்டரவாக்கம் ரயில்நிலையத்தில் ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்ட மோகன் என்ற மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்
Recommended Video
திருவள்ளூர்: பட்டரவாக்கம் ரயில்நிலையத்தில் ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை தீவிரமாக தேடி வரும் போலீசார், மோகன் என்ற மாணவரை கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர்-சென்னை மார்க்கத்தில் பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் அரிவாள், பட்டாகத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மாணவர்கள் நேற்று மோதிக்கொண்டனர்.
இதில் இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதனைக்கண்ட ரயில் பயணிகள் அனைத்து பக்கமும் அலறி அடித்தபடி சிதறி ஓடினர். குறிப்பிட்ட இந்த ரயில் மார்க்கம் வழியாக சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரி, நந்தனம் கல்லூரி மாணவர்கள் பயணிக்கின்றனர்.
ரூட் தல
இந்த மாணவர்களுக்கு இடையே யார் 'ரூட் தல' என்ற பட்டத்தை பெறுவது என்று கடும் போட்டி நடந்து வருவதாக கூறப்படுகிறது. பேருந்துகளில் மட்டும் பயன்படுத்தப்படும் இந்த ரூட் தல, என்ற பட்டம் தற்போது ரயிலில் பயணம் செய்யும் மாணவர்கள் இடையே பிரபலமாகி வருவதால் அதற்கான நபரை தேர்ந்தெடுப்பதில் பலமுனை போட்டிகள் நடைபெற்று வருகிறது.
ரவுடிகள் போல மோதல்
இந்நிலையில், நேற்று காலை சென்னை அம்பத்தூர் அருகே பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் ரவுடிகள் போல் பயங்கர ஆயுதங்களை வைத்து ரயில் பயணிகளை அச்சுறுத்தியபடி மாணவர்கள் பயணம் செய்தனர். அப்போது திடீரென ரயில் பெட்டியிலிருந்து பிளாட்பாரத்தில் குதித்த மாணவர்கள் நீளமான கத்தி, அரிவாளுடன் மோதிக்கொண்டனர். இதனால் பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த பயணிகள் அலறி அடித்து ஓடினர்.
வெட்டு காயம்
இதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாத மாணவர்கள் கையில் பட்டாக்கத்தியுடன் அங்கும் இங்கும் வலம் வந்தனர். மோதலில் ஈடுபட்ட மாணவர்களில் சிலருக்கு வெட்டு விழுந்தது. இதில் பீட்டர் என்கிற மாணவரும், காளிதாஸ் என்கிற மாணவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஒரு மாணவர் கைது
விசாரணையில் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மாநிலக்கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என போலீஸ் தரப்பில் தெரியவந்துள்ளது. மாணவர் பீட்டரும், காளிதாஸும் மாநிலக்கல்லூரியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸார் தீவிரமாக தேடிவந்த நிலையில், மோகன் என்ற மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடும் தண்டனை தேவை
இவரிடம் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் யார் யார் என்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதிக்கொள்வது தொடர்கதையாகி உள்ள நிலையில், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ரயில் பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.