அரசுப் பள்ளிகளில் "லேப்டாப்" திருட்டு- 20 செல்போன்களுடன் 8ம் வகுப்பு மாணவர் கைது
சேலம்: சேலத்தில் அரசுப் பள்ளியில் மடிக்கணினிகள் திருட்டு போன விவகாரத்தில் எட்டாம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 20 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகேயுள்ள உலிபுரம் ஊராட்சிக்குட்பட்ட மூக்காகவுண்டன்புதூர் இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை இரவு பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அங்கு அலுவலக பயன்பாட்டுக்கு வைத்திருந்த இரு மடிக்கணினிகளை திருடிச்சென்றனர்.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் லட்சுமி தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
இதில் அதே பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த மாணவரின் வீட்டில் போலீஸார் ஆய்வு நடத்தியபோது, பள்ளியில் திருடப்பட்ட இரு மடிக்கணினிகள், 20க்கும் மேற்பட்ட செல்போன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த மாணவரை போலீஸார் கைது செய்து சேலத்தில் உள்ள கூர்நோக்கு மையத்தில் சேர்த்தனர். இரு மடிக்கணினிகளையும் பறிமுதல் செய்தனர். அவரிடமிருந்த செல்போன்கள் எங்கிருந்து திருடப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.