“கை தேவையில்லை ஊதினால் போதும்” - மாற்றுத் திறனாளிகளுக்கு “மவுஸ்” கண்டுபிடித்த மாணவர்!
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் 16 வயதான சிறுவன் ஒருவர் மாற்றுத்திறனாளிகளுக்காக கைகள் தேவையில்லாமல் உபயோகப் படுத்தப்படும் மவுஸ் ஒன்றினை கண்டறிந்து சாதனை படைத்துள்ளார்.
நிஷாந்த் குமார் என்கின்ற அந்த மாணவர் கோயம்புத்தூரினை பூர்விகமாகக் கொண்டவர். சிறிது நாட்களுக்கு முன்னர் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் ஒன்றிற்கு சென்ற அவருக்கு இந்த யோசனை தோன்றியுள்ளது.
கணினியினை உபயோகிக்கும் அளவிற்கு திறமை இருந்த போதிலும் உடல் குறைபாடுகளால் அவர்களால் வெளிக்காட்ட முடியவில்லை என்பதை நிஷாந்த் உணர்ந்து கொண்டார்.
அதனையடுத்தே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார் நிஷாந்த். இந்த மவுஸ் மூலமாக மாற்றுத்திறனாளிகள் தங்கள் கணினி வேலைகளை தாங்களே செய்ய முடியும்.
ஏர் சென்சிடிவ் மைக்ரோபோன் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மவுஸானது அதன் ஹெட் கியர் மூலமாகவே கணினிப் பக்கங்களை ஆளுமை செய்யும். மைக்ரோபோனில் ஒவ்வொரு முறையும் உபயோகிப்பாளர் ஊதினால் அது பக்கங்களை கிளிக் செய்யும் என்ற வகையில் இதனை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார் நிஷாந்த்.