விருப்பமின்றி திருமணம்.. டாஸ்மாக் ஊழியர் மகள் தற்கொலை.. ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்!
ஸ்ரீபெரும்புதூர் : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே விருப்பமின்றி திருமண ஏற்பாடு செய்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தீக்குளித்து உயிரிழந்த மாணவி காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில் விபரீத முடிவை எடுத்துள்ளார். இவருக்கு படிப்பில் நிறைய ஆர்வம் என கூறப்படுகிறது
தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவியின் உயிரிழப்புக்கு உண்மையான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து பெற்றோரிடம, உறவினர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டில் காம்பவுண்ட் சுவர் வரை தேங்கியுள்ள வெள்ளம்.. திம்மாவரம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு
பிஎஸ்சி படிக்கும் மாணவி
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளது சந்தவேலூர். இங்கு மண்ணூர் டாஸ்மாக் கடையில் பணிபுரியும் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், மோகனப்பிரியா என்ற மகளும் உள்ளனர். 18 வயதே நிரம்பிய மோகனப்பிரியா காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் குடும்ப உறுப்பினர்களோடு சகோதரர் வீட்டிற்கு சென்றுள்ளார் ரமேஷ். சிறிது நேரத்தில் வீட்டிற்கு செல்வதாக பெற்றோரிடம் தெரிவித்து விட்டு மோகனப்பிரியா அங்கிருந்து வெளியேறினார்.
உடலில் தீவைத்த மாணவி
பின்னர் வீட்டிற்குள் நுழைந்த மோகனப்பிரியா தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீவைத்து கொண்டார். நெருப்பின் சூட்டை தாங்க முடியாமல் மோகனப்பிரியா அலறித் துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தரப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவ மனைக்கு மோகனப்பிரியா அனுப்பிவைக்கப்பட்டார். மோகனப்பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக் கேள்விபட்ட ரமேஷ் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார்.மருத்துவமனையில் தீக்காயங்களுடன் சடலமாக இருந்த மகளை பார்த்து ரமேசும் அவரது மனைவியும் கதறி அழுதனர்.
போலீஸ் விசாரணை
இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட சுங்குவார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு செய்வதற்கு அறிக்கை அளித்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மோகனப்பிரியாவுக்கு கல்வி கற்பதில் மிகவும் ஆர்வம் எனவும், அவருக்கு விருப்பமின்றி திருமண ஏற்பாடுகள் செய்தது பிடிக்கவில்லை என தெரியவந்தது. மேலும் திருமணம் வேண்டாம் என எவ்வளவு சொல்லியும் பெற்றோர் கேட்காமல் உறவினருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்ததால் இந்த விபரீத முடிவு எடுத்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் மறுபடியும் சோகம்
ஏற்கனவே தமிழகத்தில் பாலியல் தொல்லையால் மாணவிகள் தொடர்ந்து தற்கொலை செய்து வரும் நிலையில், திருமணத்திற்கு விருப்பம் இல்லாமல் மீண்டும் ஒரு மாணவி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.