காதல் தோல்வியில் கொசு மருந்தை குடித்த சகோதரிகள்: தங்கை மரணம், அக்கா கவலைக்கிடம்
சென்னை: சென்னையில் காதல் தோல்வியால் சகோதரிகள் இருவர் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டதில் தங்கை பலியானார். அக்காவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாதவரம் முனுசாமி நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள்கள் திவ்யா (16), கீர்த்திகா(11). திவ்யா பிளஸ்-2 படிக்கும் அதே பள்ளியில் கீர்த்திகா 6-ம் வகுப்பு படித்துவந்தார்.
பள்ளிக்கு பேருந்தில் செல்லும் போது திவ்யாவுக்கு ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொள்வார்கள். இந்த காதல் விவகாரம் கீர்த்திகாவுக்கும் தெரியும்.
இந்நிலையில் திவ்யா காதலித்து வந்த இளைஞர் ஹைதராபாத் சென்று விட்டார். திவ்யாவுடன் செல்போனில் பேசுவதையும் அவர் நிறுத்திக்கொண்டார். இதனால் விரக்தியடைந்த திவ்யா தனது காதல் தோல்வி குறித்து தங்கையிடம் கூறினார். அதோடு தான் தற்கொலை செய்யப் போவதாகவும் தெரிவித்தார்.
அக்கா மீது கொண்ட பாசம் காரணமாக கீர்த்திகாவும் தற்கொலை செய்து கொள்ள முன்வந்தார். சனிக்கிழமை மாலையில் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் அவர்கள் இருவரும் வீட்டில் இருந்த கொசு மருந்தை குடித்தனர். அவர்களின் பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது திவ்யாவும் கீர்த்திகாவும் மூர்ச்சையாகிக் கிடந்தனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் திவ்யாவை ஸ்டேன்லி அரசு மருத்துவமனையிலும், கீர்த்திகாவை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் சேர்த்தனர். அன்று இரவே கீர்த்திகா உயிரிழந்தார். திவ்யாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவிகள் இருவர் காதல் தோல்வியில் விஷம் குடித்த சம்பவம் மாதவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.