சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை
சென்னை: சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழக விடுதியில், மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நேனோ டெக்னாலஜி படித்துவந்த லோகேஷ் குகன்,19. திருப்பூரைச் சேர்ந்த அந்த மாணவர், கல்லூரி வளாகத்திற்குள் அமைந்துள்ள விடுதியில் தங்கியிருந்தார்.
ஆயுதபூஜை விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டு வந்த குகன் சனிக்கிழமையன்று விடுதிக்கு வந்தார். ஞாயிறன்று தனது அறைக்கதவை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்ட லோகேஷ் குகன், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி சக மாணவர்கள் கொடுத்த தகவலின்பேரில் வந்த போலீசார், விடுதிக் கதவை உடைத்து, லோகேஷ் சடலத்தை கைப்பற்றினர்.
கல்லூரி விடுதியில் லோகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் சக மாணவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தேர்வில் தோல்வியடைந்ததன் காரணமாக பெற்றோரை அழைத்துவரும்படி நிர்வாகம் கூறியதால் லோகேஷ் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து 2 முறை சாலை விபத்தில் சிக்கியதால், காலில் படுகாயம் அடைந்த லோகேஷ், சமீபத்தில் ஆயுத பூஜையை ஒட்டி, சொந்த ஊரான திருப்பூர் சென்றுவந்தார். காயம் காரணமாகக் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் தவித்த லோகேஷ், மன விரக்தியில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் எஸ்ஆர்எம் குழுமத்தைச் சேர்ந்த நைட்டிங்கேல் பள்ளியில் மாணவி ஒருவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த பரபரப்பு மறைவதற்குள் எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர் விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.