தாராபுரத்தில் ஆற்று நீரில் மூழ்கி மாணவன் பரிதாப பலி - வீடியோ
தாராபுரத்தில் ஆற்று நீரில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: தாராபுரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரத்தைச் சேர்ந்தவர் அற்புதராஜ். இவருடைய மகன் பிரபாகரன் அங்குள்ள அரசுப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று விடுமுறை தினம் என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றில் குளிக்கச் சென்றார்.
அப்போது, ஆற்றில் மூழ்கி குளித்துக்கொண்டிருந்த பிரபாகரனைக் காணவில்லை. அவருடைய நண்பர்கள் அவர் நீரில் மூழ்கி விளையாடுகிறார் என நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் நீண்டநேரமாகியும் பிரபாகரனைக் காணவில்லை.
இதனால்,பயந்துபோன அவருடைய நண்பர்கள் ஓடிவந்து பெற்றோரிடம் தகவல் கூறினர். அதற்குள் பிரபாகரன் உடல் ஆற்றின் கரையோரம் உள்ள ஈஸ்வரன் கோயிலில் கரை ஒதுங்கியுள்ளது. அவரை மருத்துவமனைக்கு பொதுமக்கள் எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் முன்பே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறினர். இந்த சம்பவத்தால் அப்ப்குதியில் சோகம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்துக் கூறிய பொதுமக்கள், ஆற்றில் தடுப்பணை கட்டிய பொதுப்பணித்துறையினர் இங்கு குளிப்பதால் ஆபத்து நேரிடும் என்பதை சொல்லும்விதமாக ஒரு எச்சரிக்கைப் பலகை வைத்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. கடந்த ஆண்டில் மட்டும் 5 பேர் உயிரிழந்தனர் என பொதுப்பணித்துறையினர் மீது குற்றம்சாட்டினர்.