திருச்செங்கோட்டில் பரபரப்பு... ஆசிரியர் அடித்ததால் மாணவனுக்கு மூளைச்சாவு?
திருச்செங்கோடு அருகே கிரிக்கெட் மட்டையால் ஆசிரியர் அடித்ததில் மாணவன் மூளைச்சாவு அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் : திருச்செங்கோடு அருகே கிரிக்கெட் மட்டையால் ஆசிரியர் தாக்கியதால் மாணவன் மூளைச்சாவடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள், சின்ராஜ் தம்பதியினரின் மூத்த மகன் விஸ்வேஸ்வரன். விஸ்வேஸ்வரன் திருச்செங்கோடு அருகே உள்ள விட்டம்பாளைம் அரசு மேல்நிலைப் பள்யில் 7ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
குடும்ப வறுமையின் காரணமாக விஸ்வேஸ்வரன் அரசு விடுதியிலேயே தங்கி படித்து வந்துள்ளான். கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் பள்ளி கிரவுண்டில் விஸ்வேஸ்வரன் கிரிக்கெட் விளையாடியுள்ளான்.
அப்போது ஆசிரியர் குப்புசாமியும் அவர்களுடன் விளையாடியதாகவும் அதில் தவறுதலாக பேட் பறந்து சென்று விஸ்வேஸ்வரன் தலையில் விழுந்ததாக கூறுகின்றனர் சிலர். ஆனால் ஆசிரியர் கிரிக்கெட் மட்டையால் விஸ்வேஸ்வரை அடித்ததால் மாணவன் ரத்தம் கக்கியவாறு கீழே சுருண்டு விழுந்ததாக ஒரு சிலரும் கூறுகின்றனர்.
உண்மை நிலை என்னவென்று கூற மறுப்பதால் விஸ்வேஸ்வரனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். உண்மையிலேயே விளையாடும் போது அடிப்பட்டால் அதைச் சொல்ல ஏன் மறைக்கிறார்கள் என்று மாணவனின் பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர்.
தலையில் அடிபட்ட விஸ்வேஸ்வரன் மூளைச்சாவு அடைந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார் விட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் குப்புசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.