"அதிக மதிப்பெண் எடுத்தாகனும்” - கட்டாயப்படுத்திய பெற்றோர்; தற்கொலை செய்த 10-ம் வகுப்பு மாணவி!
சென்னை: சென்னையில் பெற்றோர் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தியதால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். ஒரு தனியார் கம்பெனியில் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் செண்பக சாதுதர்ஷணா. இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
செண்பகசாது தர்ஷணாவின் பெற்றோர் 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றும், அப்படி எடுத்தால் தான் உன் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்றும் கண்டிப்புடன் கூறியதாக தெரிகிறது.
பெற்றோர் கூறியது போல் அதிக மதிப்பெண் எடுக்க முடியுமா என்று நினைத்த செண்பகசாதுதர்சணா மன வருத்தத்தில் கடந்த சில நாட்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனவேதனை அதிகமானதால் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சென்ற போலீசார் மாணவி உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.