பாளையில் வார்டனும், ஆசிரியரும் தாக்கியதில் பள்ளி மாணவர் படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி
சங்கரன்கோவில்: பாளையங்கோட்டையில் விடுதியில் தங்கி படித்த மாணவரை ஆசிரியரும், வார்டனும் தாக்கியதால் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா வடக்கு அச்சம்பட்டியைச் சேர்ந்தவர் பொன். இவர் சேர்ந்தமரம் மின்வாரிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஏவின்ராஜன். பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அவர் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த டியூப்லைட் 3 உடைந்துள்ளது. அப்போது அங்கு வந்த விடுதி வார்டன் விமல், பர்னபாஸ், உதவி தலைமை ஆசிரியர் குமார் ஆகியோர் அங்கிருந்த மாணவர்களிடம் விசாரித்தனர். அதற்கு அவர்கள் விடுதியின் பல்பை உடைத்ததாக ஏவின்ராஜன், முருகேசன், சதீஸ், முரளி, மாணிக்க ராஜா ஆகிய 5 பேர் பெயரை கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த வார்டன்கள் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ஆகியோர் ஏவின்ராஜன் மற்றும் முருகேசனை கையாலும், கம்பாலும் சரமாரியாக தாக்கியதாகவும், மேலும் அடித்தது வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களிடம் எழுதி வாங்கியதாகவும் கூறப்படுகிறது. தாக்கப்பட்ட ஏவின்ராஜன் வலியால் துடித்தபடி இருக்கவே அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் அங்கு சென்று மகனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் விடுதி வார்டனிடம் நடந்தது பற்றி கேட்கவே அதற்கு விடுதி பல்பை உடைத்ததற்கு ரூ. 2 ஆயிரமும், மீண்டும் இங்கு தங்கி படிக்க ரூ.5 ஆயிரமும் கட்ட வேண்டும் என்றும், மாணவரை அழைத்து செல்லும்படியும் கூறியுள்ளார். பலத்த காயமடைந்த தனது மகனை அவர் அழைத்து வந்து சங்கரன்கோவில் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இது குறித்து போலீசார் மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.