தண்ணீர் லாரி மோதி மாணவர் பலி : லாரியை அடித்து நொறுக்கிய மக்கள் - முகப்பேரில் பதற்றம்
சென்னையில் தண்ணீர் லாரி மோதிய விபத்தில் 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சென்னை: முகப்பேர் பகுதியில் இன்று காலையில் தண்ணீர் லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற பதினோராம் வகுப்பு பள்ளி மாணவர் உயிரிழந்தார். அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த மாணவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த மாணவரின் பெயர் நிகில் என்பதாகும். தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது குடிநீர் விநியோகம் செய்யும் லாரி பின்னால் வந்து வேகமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
சம்பவ இடத்திலேயே மாணவர் நிகில் உயிரிழந்தார். மற்றொரு மாணவர் படுகாயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து நடந்த இடத்தில் கூடிய பொதுமக்கள் லாரியை அடித்து நொறுக்கினர். கூடவே தப்பியோடிய டிரைவரையும் தாக்கினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
குடிநீர் லாரி அதிவேகமாக வந்ததே விபத்திற்குக் காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மாணவனின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சென்னை நகரில் குடிநீர் வினியோக்கிக்கும் லாரிகளில் பெரும்பாலனவை சாலையில் ஓடுவதற்கே தரம் இல்லாதவையாக உள்ளன. இவை சராசரியாக நாளுக்கு ஒரு அப்பாவியை கொன்று வருகின்றன. இந்த லாரிகளுக்கு இரு சக்கரவாகனங்களில் செல்வோர், பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவிகள், முதியோர் என பல தரப்பினரும் பலியாகி வருகின்றனர்.
அதிகமாக டிரிப் அடித்தால் அதிக லாபம் என்பதால், சரியாகக் கூட தூங்காமல், குடித்துவிட்டு, கையில் பீடியுடன்,படிப்பறிவில்லாத டிரைவர்கள் படு வேகத்தில் லாரியை செலுத்தி அப்பாவிகளைக் கொன்று வருகின்றனர் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.