நடத்தை பற்றி பேசியதால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை: தம்பதி மீது வழக்கு
சேலம்: நடத்தையைப் பற்றி தவறாகப் பேசியதால் மனமுடைந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் அருகே உள்ள மாதையன் குட்டையைச் சேர்ந்தவர் ராஜா. விவசாயத் தொழிலாளியான இவரது மகள் சுமதி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார்.
தங்களது குடும்ப நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடம், மாணவி சுமதி செல்போனில் அடிக்கடி பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ரவிக்குமாரின் அக்கா அமுதா (26), அவரது கணவர் யோபு ஆகியோர் ராஜாவின் வீட்டுக்கு சென்று, மாணவி சுமதியை கூப்பிட்டு இனி என்னுடைய தம்பியுடன் அடிக்கடி போனில் பேசக்கூடாது என்று கண்டித்ததுடன், மாணவியின் நடத்தையைப் பற்றி மோசமாக விமர்சனம் செய்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
ஏராளமானோர் முன்னிலையில் அமுதா கண்டித்தது மாணவி சுமதிக்கு அவமானமாக போய்விட்டது. இதனால், மன வேதனையடைந்த மாணவி சுமதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து மாணவியின் தாயார் ருக்குமணி மேட்டூர் போலீஸில் அளித்த புகாரின் பேரில் அமுதா, யோபு ஆகியோர் மீது மாணவி சுமதியை தற்கொலைக்குத் தூண்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.