ஆசிரியர்- மாணவர் உறவு.. இவ்வளவுதான் சூட்சுமம்.. புரிந்துகொண்டால், அதுதான் மாபெரும் மாற்றம்!
பள்ளி ஆசிரியரின் பணிமாறுதலை ரத்து செய்ய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
அரக்கோணம்: தமிழகத்தில் பல்வேறு கலவரம், பிரச்சனைகளுக்கு நடுவே கல்வித்துறையில் ஒரு நல்ல மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. குறிப்பாக ஆசிரியர்-மாணவர் உறவுகளில் நடைபெற்று வரும் இந்த மாற்றம் ஒரு புதிய அத்தியாயத்தின் துவக்கம் எனலாம்.
அரக்கோணத்தை அடுத்துள்ள பகுதி சேந்தமங்கலம் அரசினர் மேல்நிலைப்பள்ளி. இங்கு தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் விஜயா. இவருக்கு வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், தங்கள் ஆசிரியர் விஜயாவை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என பள்ளி முன்பு உட்கார்ந்து இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே ஆசிரியர் பகவான் விஷயத்திலும் இதேபோன்ற சம்பவம் நடைபெற்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இப்போது அதே பாதையில் ஆசிரியர் விஜயாவும் தடம் பதித்துள்ளார். அதற்கு காரணம் ஆசிரியர் விஜயாவின் அணுகுமுறைதான் என சொல்லப்படுகிறது. ஆசிரியர்-மாணவர் நல்லுறவு என்பது ஏதோ சிக்கலான விஷயமோ, அரிதாக நடைபெறும் நிகழ்வோ கிடையாது.
ஆசிரியர் பகவானை உங்களுக்கு ஏன் இவ்வளவு பிடிக்கிறது என மாணவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மாணவர்கள் அளித்த பதில், ''அன்பா பேசுவாரு, எளிமையா பாடம் நடத்துவாரு, எங்களுக்கு அவரை ரொம்ப பிடிக்கும்'' என்பதுதான்.
அதேபோல, மாணவர்கள் உங்கள் மேல் இவ்வளவு பிரியமாக இருக்க என்ன காரணம் என ஆசிரியர் பகவானிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில், "என்னை நம்பி குழந்தைகள் அவர்களின் சந்தோஷங்களையும், பிரச்சனைகளையும் பகிர்ந்துகொள்வார்கள்" என்றார்.
இவ்வளவுதான் சூட்சுமம். இவ்வளவுதான் சாராம்சம். இதை புரிந்துகொண்டால், கல்வித்துறையில் அதுதான் மிகப்பெரிய மாற்றம்... அதுதான் மறுமலர்ச்சி.. அதுதான் சீர்திருத்தம்... ஆனால் மாணவர்கள் இப்படி தங்களுக்கு பிடித்த ஆசிரியர்களுக்காக போராட துவங்கிவிடுவதால் கடைசியில் இக்கட்டான, தர்மசங்கட நிலை பள்ளி கல்வித்துறைக்குதான் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பள்ளிகல்வித்துறை என்ன நடவடிக்கை எடுக்குமோ?