மாணவி சரண்யாவின் மறு பிரேத பரிசோதனை முடிந்தது: 3 நாட்களில் அறிக்கை அளிக்கப்படும் என தகவல் !
காஞ்சிபுரம்: செய்யூர் மயானத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட சரண்யாவின் சடலம், அங்கு பிரேத பரிசோதனை நடத்த, அங்கு போதிய வசதிகள் இல்லாததால், நீண்ட வாதத்திற்குப் பிறகு சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ அறிக்கை இன்னும் 3 நாட்களில் சிபிசிஐடி போலீசிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள எஸ்.வி.எஸ். மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த மாணவிகள் பிரியங்கா, சரண்யா, மோனிஷா ஆகியோர் கடந்த ஜனவரி 23ம் தேதி கிணற்றில் சடலமாக மிதந்தனர். மாணவிகளின் உடல்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மோனிஷாவின் உடல் மட்டும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் மோனிஷா நீரில் மூழ்கி இறக்கவில்லை என்று பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சரண்யாவின் தந்தை ஏழுமலையும் தன்னுடைய மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும், எனவே அவரது உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பான விசாரணையில், உடலை அடக்கம் செய்து 15 நாட்களுக்கு மேலாகி விட்டதால் மீண்டும் மறு பரிசோதனைக்கு உத்தரவிட முடியாது என்று நீதிபதி ஆர்.மாலா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்திலேயே ஏழுமலை மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் அக்னிகோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், "சரண்யாவின் உடலை மறுபரிசோதனை செய்ய உத்தரவிடுகிறோம். உடலின் நிலையை பொறுத்த உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பகுதியிலேயே டாக்டர்கள் மறு பிரேத பரிசோதனை செய்யலாமா அல்லது அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து உடலை பரிசோதனை செய்யலாமா என்பது குறித்து டாக்டர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
மனுதாரர் தன் தரப்பு டாக்டர் ஒருவரை பரிசோதனை குழுவில் இடம் பெற செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார். இதை ஏற்க முடியாது. வேண்டும் என்றால் மனுதாரர் தரப்பு டாக்டர் ஒருவர், பிரேத பரிசோதனையை கண்காணிக்கலாம். இதுகுறித்து விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும்" என்றனர்.
சரண்யாவின் உடல் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்னரே செய்யூர் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய சென்னை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து சென்னையில் இருந்து இன்று காலை டாக்டர்கள் குழுவினர் புறப்பட்டு சென்றனர். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து தடயவியல் துறை தலைவர் டாக்டர் சம்பத்குமார் செய்யூருக்கு சென்றார். செய்யூர் தாசில்தார் செல்வராஜ், செய்யூர் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் ஆகியோரது முன்னிலையில் மாணவி சரண்யாவின் உடல் 10.30 மணி அளவில் தோண்டி எடுக்கப்பட்டது.
ஆனால் போதிய வசதிகள் இல்லாததால், செய்யூர் மயானத்தில் மறு உடற்கூறு ஆய்வு நடந்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மாணவி சரண்யா உடலை எடுத்துச் செல்ல உரிய வசதி உள்ள வாகனம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். சிபிசிஐடி கொண்டு வந்த வாகனத்தில் உடலை எடுத்தச் செல்ல இயலாது என்றும் சிபிசிஐடி சொல்வதுபோல் எடுத்துச் சென்றால் தடையங்கள் கிடைக்காது என்றும் மருத்துவர்கள் கூறினர்.
வேறு வாகனம் ஏற்பாடு செய்யாமல் அங்கேயே உடற்கூறு ஆய்வு செய்ய சிபிசிஐடி போலீசார் நிர்பந்தம் செய்வதாக தெரிவித்தனர். சிபிசிஐடி நிர்பந்தத்துக்கு பணிய மருத்துவர்கள் மறுப்பால் இடுகாட்டில் பரபரப்பு ஏற்பட்டது. தோண்டி எடுக்கப்பட்ட சரண்யா உடலை வைத்துக் கொண்டு அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சரண்யாவின் தந்தை ஏழுமலை, தாய் சிந்தனை செல்வி ஆகியோர் சோகத்துடன் கண்ணீர் மல்க காத்திருந்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் சரண்யாவின் சடலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, தடயவியல் அறிவியல் துறை இயக்குனர் முருகேசன் தலைமையிலான 9 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் மறு பிரேத பரிசோதனை செய்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற பிரதே பரிசோதனை வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. பின்னர் சரண்யாவின் உடல் செய்யூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரதே பரிசோதனை அறிக்கை இன்னும் 3 நாட்களுக்குள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.