திருவொற்றியூர் மாணவனுக்கு அரிவாள் வெட்டு: 2 பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கைது
சென்னை: சென்னை திருவொற்றியூரில் கல்லூரி மாணவனை ஓட ஓட விரட்டி வெட்டிய வழக்கில் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர் பத்மநாபா காலனியைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் செல்வராஜ், 20. சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த செப்டம்பர் 8ம்தேதியன்று காலை 7 மணியளவில் செல்வராஜ் திருவொற்றியூர் பேருந்து நிலையத்தில் நடந்து சென்றார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் அவரை வழிமறித்தனர். அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓட்டம் பிடித்தார். அவரை விரட்டிச் சென்ற கும்பல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர்.
தலை, கையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த செல்வராஜ் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார். உடனே மர்ம ஆசாமிகள் இருசக்கரவாகனத்தில் தப்பி சென்று விட்டனர். இந்த கொலை வெறி தாக்குதல் நடந்த போது பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அவர்கள் பயத்தில் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய செல்வராஜை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தாக்குதல் நடந்த இடத்தில் 2 கத்திகள் கிடந்தன. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
செல்வராஜை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடியவர்கள் இன்னொரு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. வழக்கமாக கல்லூரி மாணவர்கள் பேருந்து வழித்தடம் அல்லது பெண்களை கிண்டல் செய்வதில் போட்டி உள்ளிட்ட காரணங்களுக்காக மோதுவது வழக்கம்.
இது தொடர்பாக செல்வராஜிடம் போலீசார் விசாரணை நடத்திய போதும் அதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை. இந்த மோதல் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் தப்பி ஓடிய மாணவர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் மாணவனை வெட்டிய வழக்கில் 2 பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.