மாணவி வளர்மதிக்கு தொடர்ந்து நக்சலைட் முத்திரை குத்தும் தமிழிசை!
ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவி வளர்மதி நக்சல் அமைப்புடன் தொடர்புடையவர் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை: ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவி வளர்மதி நக்சல் அமைப்புடன் தொடர்புடையவர் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கக்கூஸ்ஆவணப்பட இயக்குனர், சமூக செயற்பாட்டாளர் திவ்யபாரதி மதுரை ஆணையூரில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். 2009ல் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் பங்கேற்றதால் திவ்யா கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திவ்ய பாரதி கைது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது பின்புலம், குற்றச்சாட்டு இல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவதில்லை என்றார்.
மேலும் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாணவி வளர்மதி நக்சல் அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுவதாக அவர் கூறினார். தமிழிசையின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.