குண்டர் சட்டத்தில் கைதான மாணவி வளர்மதி சஸ்பெண்ட்.. சேலம் பல்கலைக்கழகம் நடவடிக்கை
சேலம்: ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடி குண்டர் சட்டத்தில் கைதான மாணவி வளர்மதி பல்கலைக்கழகத்திலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கதிராமங்கலம், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக துண்டுபிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார் இதழியல் மாணவி வளர்மதி. நக்சலைட்டுகளுக்கு ஆள் சேர்க்கும் புகாரில் கைது செய்து சேலம் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீது, குண்டர் சட்டம் போடப்பட்டதையடுத்து அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்திற்கு ஸ்டாலின், வைகோ, சீமான், வேல்முருகன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்திற்கு பலரும் அவரது முகநூல் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக போராடினால் நக்சலைட், மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்துவதும் தொடர்ந்து போராடும் செயல்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டம் போடுவதும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கங்காணி வேலை பார்க்கும் இந்த அரசின் வாடிக்கையாகி விட்டது என்று விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில் மாணவி வளர்மதியை சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. கைதாகி சிறையில் உள்ள மாணவி வளர்மதி தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இதழியல் படிப்பு படித்து வருகிறார்.