கோவையில் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை!
குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்ட மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கோவை: குடும்ப சூழலின் காரணமாக குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள், 12-ம் வகுப்பு பொது தேர்வில் ஆயிரம் மதிப்பெண்களுக்கும் மேல் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
குழந்தைகளை தொழிலாளர்களாக அமர்த்தக் கூடாது என அரசும் பலதரப்பட்ட அமைப்புகளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், குடும்ப சூழல், வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
எனினும் தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களாக உள்ள குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு கல்வியை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் பனியன் நிறுவனங்களில் மூன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே குடும்ப சூழல் வறுமையின் காரணமாக வேலைக்கு சென்ற 8 பேரும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின்கீழ் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட அவர்கள் பள்ளியில் கல்வி கற்கவும் அனுப்பப்பட்டனர். அதில் இந்த வருடம் குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்ட 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய 8 மாணவர்களும் தேர்ச்சியடைந்து உள்ளனர்.
தரணிதரன் என்ற மாணவர், 1093 மதிப்பெண்கள் பெற்று சாதனையே படைத்துள்ளார். வறுமையின் காரணமாக திருப்பூரில் வேலை செய்து வந்த இவரை குழந்தை தொழிலாளர் நல அலுவலர்கள் மீட்ட நிலையில் தற்போது அவருக்கு வழங்கப்பட்ட கல்வியால் இந்த அளவிற்கு படித்து உள்ளார்.
அதே போல மற்ற மாணவர்களும் நல்ல மதிப்பெண்களை எடுத்து உள்ளனர். ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த மாணவர் தற்போது 12-ம் வகுப்பு படித்து மேற்படிப்பு படிக்க உள்ள நிலையில் முன்னேறி உள்ளனர். இதனால் அந்த மாணவர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.