பட் படார்.. டம் டமார்.. பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி? #diwali
தேவகோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி? பட்டாசுகளை வெடிப்பது எப்படி? என தேவகோட்டை தீயணைப்பு அதிகாரி பள்ளி மாணவர்களுக்கு நேரடி செயல் முறை விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியை செல்வமீனாள் வரவேற்புரை வழங்கினார்.
இதில் தேவகோட்டை தீயணைப்பு அதிகாரி கருப்பையா பள்ளி மாணவ-மாணவிகள் எப்படி தீபாவளி பண்டிகையின் போது பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும்? என்பது குறித்து செயல்முறை விளக்க பயிற்சி அளித்தார். மேலும் பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தீயை அணைக்க வேண்டும்? எப்படி பட்டாசு பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் எனவும், பேரிடர் மேலாண்மை மீட்புப்பணிகள் பற்றிய செயல் விளக்கம் எப்படி என்பதையும் விளக்கி சொன்னார்.
பின்னர் விழாவில் தீயணைப்பு அதிகாரி கருப்பையா பேசுகையில், சீன பட்டாசு வேண்டாம். பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் குழந்தைகள் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை பெரியவர்களின் மேற்பார்வையில் வெடிக்க வேண்டும். பெற்றோர்கள் சீன பட்டாசுகளை வாங்கி தரவேண்டாம்.
தீ விபத்தை A,B,C,D,E என வகை படுத்துகின்றனர். A என்பது எரிந்து சாம்பலாகி தண்ணீர் ஊற்றி அணைப்பது ஆகும். Bஎன்பது ஆவியாகி எண்ணெயில் பட்டு தீ பிடிப்பது ஆகும். இதனை.மணல் போட்டு அணைத்தல் வேண்டும். FIRE என்பதில் F என்கிற எழுத்துக்கு தீயை கண்டுபிடி, I என்ற எழுத்துக்கு தீயை தெரியபடுத்துதல் R என்ற எழுத்துக்கு தீயில் இருந்து காப்பாற்றுதல் E என்ற எழுத்துக்கு தீயில் இருந்து வெளியேறுதல் என்கிற விளக்கத்தை கொடுத்தார்.
மாணவர்கள் வெடி வெடிக்கும்போது அம்மா, அப்பாவை பக்கத்தில் வைத்துக் கொண்டு வெடிக்கவும். வெடிக்காத வெடியை கையில் எடுக்க கூடாது. ராக்கெட் வெடி வாங்க வேண்டாம். குப்பைகளை பக்கத்தில் போட்டு வெடிக்க வேண்டாம். இறுகிய உடைகளை போட்டு கொண்டு வெடி வெடிக்க வேண்டும். தீ பிடித்து விட்டால் வாளி தண்ணீரை அப்படியே ஊற்றாமல் கப்பில் அள்ளி தெளிக்க வேண்டும்.
மேலும் தீ காயங்களின் வகைகளையும் தீ காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக எடுத்து கூறினார். பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேவகோட்டை தீயணைப்பு நிலையத்தை சார்ந்த முன்னனி தீயணைப்போர் ரவி மணி, ராஜவேல்,போக்குவரத்து நிலைய அலுவலர் கிருஷ்ணம், தீயனைப்போர் அருள்ராஜ், பிரகாஷ், இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும், பாதுகாப்பாக வெடிப்பது எப்படி? என்பது தொடர்பாக செயல் விளக்கம் செய்தும் காண்பித்தனர். மாணவர்களின் பெற்றோர்கள் புவனேஸ்வரி, மகேஸ்வரி, மாலா, பத்மா,ராணி, காமாட்சி, பாகம்பிரியாள் உட்பட பலர் கலந்து கொண்டு செயல் விளக்கத்தை நேரில் பார்த்து பயன் பெற்றனர்.
நிகழ்ச்சியில் சந்தியா, கீர்த்தியா, ஜெகதீஸ்வரன், காயத்ரி, அஜய்பிரகாஷ், உமா மஹேஸ்வரி, தனலெட்சுமி, ராஜேஸ்வரி உட்பட பல மாணவ,மாணவியர் கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர். நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.
தீயணைப்புத்துறை அதிகாரி கருப்பையா பட்டாசு வெடிப்பது தொடர்பாக கொடுத்த டிப்ஸ்:
- பட்டாசுகளை கொளுத்தும்போது தளர்வான ஆடைகளை உடுத்துவதை தவிருங்கள்.
- டெரிகாட்டன், டெர்லின் ஆகிய எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை கண்டிப்பாக அணியக் கூடாது.
- மூடிய பெட்டிகள், பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்கக் கூடாது.
- மருத்துவமனைக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
- விலங்குகளை துன்புறுத்தும் வகையிலும் அவை பயப்படும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
- அதிக சத்தம் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். ஏனெனில் அது உடலையும், மனநிலையும் பாதிக்கும்.
- காதுகளை செவிடாக்கும்.பட்டாசுகளை கொளுத்தி கையில் வைத்து கொண்டோ உடலுக்கு அருகிலோ வெடிக்க வேண்டாம்.
- பாதுகாப்பான தொலைவில் வைத்தே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.