தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு.. இன்றிலிருந்து விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான கவுன்சில் தேர்வில் கலந்து கொள்ள இன்றில் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான கவுன்சில் தேர்வில் கலந்து கொள்ள இன்றில் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
அண்ணா பல்கலையில் பொறியியல் கவுன்சிலிங் இந்தாண்டில் இருந்து ஆன்லைன் முறையில் மாற்றப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான ஆன்லைன் பதிவு முறை இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் விண்ணப்ப பதிவு வரும் மே 30 தேதி வரை நடைபெறும்.
இதற்காக தமிழகம் முழுக்க 42 மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. காலை 9 மணிக்கு இந்த மையங்கள் திறக்கப்படும். சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டும் தேர்வு முடியும் வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க காத்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் மொத்தம் அண்ணா பல்கலை.யின் கட்டுப்பாட்டில் உள்ள 567 கல்லுாரிகளில் உள்ள மொத்தம் 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு இந்த மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது. எப்போதும் போல இல்லாமல் இந்த வருடத்தில் இருந்து ஆன்லைன் மூலம் சேர்க்கை நடத்தப்படுகிறது. மக்கள் சென்னைக்கு வந்து கஷ்டப்படுவதை இது தடுக்கும்.
முக்கியமாக விண்ணப்ப கட்டணம் எவ்வளவு என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. தலித், பழங்குடியினர் மற்றும் அருந்ததியர் மாணவர்கள் கட்டணமாக 250 ரூபாய் செலுத்த வேண்டும். மற்ற மாணவர்கள் 500 ரூபாய் செலுத்த வேண்டும். மாணவர்கள் இதுகுறித்த விவரங்களை ''https://tnea.ac.in/tneaonline18/index.php'' என்ற அண்ணா பல்கலை. பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.